எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்!
ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்தத் தடுப்பு மருந்தினை குரங்குகளுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்ததில் அம்மருந்து குரங்குகளை ஹெச்.ஐ.வி தொற்றில் இருந்து பாதுகாப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கு காரணமாக இருக்கும் ஹெச்.ஐ.வி. நோய்க் கிருமிகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்தத் தடுப்பு மருந்தினை குரங்குகளுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்ததில் அம்மருந்து குரங்குகளை ஹெச்.ஐ.வி தொற்றில் இருந்து பாதுகாப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பு மருந்து அடுத்த கட்ட சோதனைக்காகக் காத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2,600 பெண்களுக்குக் கொடுத்து, இம்மருந்து ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளின் தாக்குதலில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறதா எனச் சோதித்தறிய இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடுத்த கட்ட சோதனை முயற்சிக்கு “HVTN705“ அல்லது "Imbokodo" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க மொழிகளுள் ஒன்றான ஜீலு மொழியில் "Imbokodo" என்னும் சொல்லுக்கு “பாறை” என்பது பொருளாகும்.

நம்பிக்கை தரும் ஆய்வு
இது வரை நடத்தப்பட்ட சோதனைகள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளன. ஆனால், அடுத்த கட்ட சோதனைகளில் இது போன்ற வெற்றி தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். " இதுவரை நடந்த சோதனை முயற்சிகள் நம்பிக்கையைத் தருகின்றன. இனி வருகின்ற சோதனைக் கட்டங்களைக் கவனமுடன் கடக்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், ஆராய்ச்சிக் குழுவின் தலைவர், டாக்டர் டேன் பரோச் (Dan Barouch).
ஆய்வகச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட மூன்றில் இரண்டு பங்குக் குரங்குகளை இம் மருந்து ஹெச்.ஐ.வி. கிருமிகளிடமிருந்து காப்பாற்றியிருக்கிறது. அதன் காரணமாகவே இம் மருந்து மனிதர்களையும் பாதுகாக்கும் என்று சொல்லிவிட முடியாது. சோதனையின் முடிவில்தான் இம்மருந்து மனிதர்களை ஹெச்.ஐ.வி. கிருமியிடமிருந்து பாதுகாக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். "Imbokodo" சோதனையின் முடிவு 2021 அல்லது 2022 ஆண்டில் தெரிய வரும்.

40 ஆண்டுகால முயற்சி
ஹெச். ஐ.வி. நோய்க் கிருமிக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதில் நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி ஐந்தாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் ஆராய்சிக் குழுவினர். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில், "RV144" என்னும் பெயரில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் ஓரளவுக்கு பயன் தந்தன. இம்முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை 16,000 பேருக்குக் கொடுத்தததில் 31.2 சதவிகித அளவுக்குத்தான் பயன் தந்தது. எனவே அப்போதைய முயற்சிகள் கைவிடப்பட்டன.

ஏழு வகையான மருந்துக் கலவைகள்
தற்போதைய ஆராய்ச்சியின் போது, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 393 பேருக்குச் சோதனை மருந்து கொடுக்கப்பட்டது. பல்வேறு வகையான கலவைகளில் தயரிக்கப்பட்ட ஏழு வகையான மருந்துகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இந்த ஆய்வின் பொழுது மருந்தின் நோய் எதிர்ப்பு ஆற்றலை சோதிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்வர்களின் பல்வேறு வகையான HIV கிருமிகளின் மாதிரிகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
சோதனையின் பொழுது தடுப்பு மருந்து பாதுகாப்பானது எனத் தெரிய வந்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தியவர்களுள் 5 பேருக்கு மட்டும், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, முதுகுவலி, மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன.
72 குரங்குகளை வைத்துத் தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் இரண்டு பங்குக் குரங்குகளுக்கு இம்மருந்து HIV கிருமியிடமிருந்து முழுவதுமான பாதுகாப்புத் தந்திருந்ததைக் கண்டறிந்தனர்.

காலத்தின் தேவை
"இன்றைய உலகத்துக்கு HIV கிருமிகளை அழிப்பதற்கான தடுப்பு மருந்து எவ்வளவு முக்கியமான தேவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை." என்கிறார், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர், ஃபிரான்கோய்ஸ் வென்டர் (Francois Venter)
"ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், இந்தச் சோதனை மருந்தைப் பற்றிய நம்பிக்கையில் உள்ளோம். பல வகையிலும் இம் மருந்து புதுமையாக உள்ளது. அதன் காரணமாகவே ஆவலைத் தூண்டுகிறது. இருந்தாலும் நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது" என்கிறார் இவர்.

உயிர்க்கொல்லி நோய்
உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 37 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.8 மில்லியன் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள். வருடந்தோறும் பத்து லட்சம் மக்கள் இந்நோயால் இறக்கின்றனர்.
HIV வைரஸ் 1980 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. இதுவரை இந்நோயால் 35 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
HIV கிருமிகள் உடம்பில் உள்ள அணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனுடைய நோய் எதிப்பாற்றலை அழிக்கின்றன. நாட்கள் செல்லச் செல்ல உடல் முழுவதும் பரவுகின்றன.
தற்போதைய நிலையில் HIV கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நாள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது (anti-retroviral treatment - ART).
உடலுறவின் போது ஆணுறை அணிவது HIV கிருமிகளிடமிருந்து பாதுகாப்புத் தேடும் முயற்சிகளுள் ஒன்றாக உள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஜீலை 23 முதல் 27 வரை சர்வதேச எய்ட்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை ஒட்டி எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வுத் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








