எலான் மஸ்க்கிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த பில் நெய்; என்னது அது?
மனிதர்கள் செவ்வாய் எனும் சிவப்பு கிரகத்தில் நிரந்தரமாக வாழ முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அறிவியல் மீது ஆர்வம் கண்ட இளைய தலைமுறையின் ஆஸ்தான குருவான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் ஆன எலான் மஸ்க்கிற்கு எச்சரிக்கையா? என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். ஏனெனில் அந்த எச்சரிக்கையை விடுத்தது சாதாரண ஆள் இல்லை - அறிவியல் உலகின் தலைசிறந்த விமர்சகர்களில் ஒருவரான பில் நெய்.

அப்படி என்ன கூறியுள்ளார்? செவ்வாயை காலனித்துவப்படுத்துவதை தனது ஆகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கொண்டு, அதில் பிஸியாக பணியாற்றி வரும் எலான் மாஸ்க்கிற்கு "வேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார் பில் நெய்.

ரெட் பிளானட்
அவர்," மனிதர்கள் ரெட் பிளானட்டை நிச்சயமாக ஆக்கிரமிக்க கூடாது" என்று கூறியுள்ளார். யுஎஸ்எஸ் டுடேவுடன் நிகழ்ந்த சமீபத்திய உரையில், பில் நெய் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆனது முற்றிலும் 'விஞ்ஞான புனைவு' கதைகள் போன்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

பில் நெய்
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அனைத்து சரியான நிலைமைகளையும் கொண்டிருக்கும் இந்த பூமியைப் பராமரிக்க, மனிதர்கள் போதுமான அளவு சக்தியை பயன்படுத்தவில்லை என்றும் அந்த உரையின்போது பில் நெய் தெரிவித்தார்.

உயிர்வாழ எந்த விதமான ஆதாரமும் இல்லை
நாம் வாழும் இந்த கிரகத்தை நாம் பார்த்துக் கொள்ள முடியாத நமக்கு இன்னொரு கிரகம் வேண்டுமா? என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். மனிதர்கள் செவ்வாய் எனும் சிவப்பு கிரகத்தில் நிரந்தரமாக வாழ முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பில் நெய்யின் கருத்துப்படி, செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழ்நிலைகள் தண்ணீரைக் கொண்டிருப்பதில்லை, உணவு இல்லை, அங்கே சுவாசம் எதுவும் இல்லை என்பதால், அங்கே உயிர்வாழ எந்த விதமான ஆதாரமும் இல்லை.

மார்டியன்ஸ்களாக வாழ்வதற்கும் தயாராக இல்லை
"யாரும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கும் அங்கே மார்டியன்ஸ்களாக வாழ்வதற்கும் தயாராக இல்லை. அங்கு எந்த தண்ணீரும் இல்லை, உணவும் இல்லை, முக்கியமாக செவ்வாய் மீது ஆர்வம் கொண்டுள்ள தோழர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அங்கு மூச்சுவிட எதுவும் இல்லை " என்று பில் நெய் கூறியுள்ளார்.

ஜீவராசிகள்
மேலும் அவர் எங்கோ ஒரு மூலையில் செழித்து வாழும் அறிவார்ந்த அன்னிய வாழ்க்கையை கண்டறிவதற்கு தெரியாத எல்லைகளை விண்வெளி வல்லுனர்கள் ஆராய முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். என் வாழ்நாளுக்குள், வேறொரு உலகில் வாழும் ஜீவராசிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன் தான். அதற்காக செவ்வாய் கிரகத்திற்கு செல்வதா? அதுதான் அடுத்த தர்க்கரீதியான இடமா? அப்படி செய்தால் "எங்கு அப்படி என்ன இருக்கிறது?" என்று மக்கள் கேட்பார்கள். அதனால் தான் நாம் தொட முடியாத எல்லைகளை ஆராய வேண்டும் என்கிறேன் என்று கூறி நெய் தனது உரையை முடித்தார்.

சைபோர்க்கள்
ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு உயர் தர பிரிட்டிஷ் வானியலாளர் மற்றும் ராயல் சொசைட்டியின் முன்னாள் தலைவர் ஆன சர் மார்டின் ரீஸ், கலப்பின மனித சைபோர்க்கள் எதிர்காலத்தில் செவ்வாயைக் காலனித்துவமாக்கும் என்று கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மனித கலப்பினங்கள் உயிரி மாற்றங்கள் மற்றும் சைபோர்க் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உயிரினங்களாகும் என்று ரீஸ் நம்புகிறார்.

எலான் மஸ்க்
"தங்கள் உயிர்ச்சத்து சூழலுக்கு பொருந்தக்கூடிய உயிரியல்-மாற்றத்தையும், சைபோர்க் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர், அவர்கள் விரைவில் ஒரு புதிய இனங்கள் போல் ஆகிவிடுவார்கள்" என்று மார்ட்டின் ரீஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் பார்வையில் செவ்வாய்க்கு செல்வது என்பது சாத்தியம் மற்றும் தேவையானது. சரி, எலான் மஸ்க் யார் வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டார் என்பதை காலம் காட்சிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications