உனது ராஜாங்கம் இதுதானே.! முக்கிய சேவையை நிறுத்தும் Amazon.. இனி இதை தேட வேணாம்!
இந்தியாவின் பிரதான ஆன்லைன் விற்பனை தளமாக இருப்பது Amazon, இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனமானது பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தொகுத்து வழங்கி வருகிறது. அதன்படி தொடங்கப்பட்ட சேவை தான் அமேசான் ஃபுட் விநியோக சேவை. அமேசான் நிறுத்தி வரும் சேவைகளில் தற்போது இதுவும் இணைந்திருக்கிறது.

அமேசான் ஃபுட் சேவை
அமேசான் ஃபுட் சேவையானது 2020 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்விகி மற்றும் சொமாட்டோவிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அமேசான் உணவு விநியோக வணிக சேவையானது டிசம்பர் 29 முதல் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முடிவுக்கு வரும் அமேசான் சேவை
டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டு வளர்ந்து வருகிறது. குறிப்பாக உணவு டெலிவரி சேவைகளின் வளர்ச்சி என்பது அலப்பறியதாக இருக்கிறது. உணவு டெலிவரி சேவைகளில் பிரதான தளமாக இருப்பது Swiggy மற்றும் Zomato ஆகும். அமேசான் நிறுவனமும் ஸ்விகி மற்றும் சொமாட்டோவிற்கு போட்டியாக உணவு டெலிவரி சேவையில் களமிறங்கியது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவையானது தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 29 மட்டுமே ஆர்டர் செய்ய முடியும்
தி எகனாமிக் டைம்ஸ் இல் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, Amazon Food எனப்படும் அதன் உணவு விநியோக வணிகம் டிசம்பர் 29 முதல் நிறுத்தப்பட இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 29க்கு பிறகு Amazon Food மூலம் வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாது. அதுவரை நீங்கள் தொடர்ந்து ஆர்டர்களை பெறலாம்.

2020 இல் தொடங்கிய சேவை 2022 இல் முடிவு
அமேசான் ஃபுட் இந்தியாவில் ஸ்விகி மற்றும் சொமாட்டோவிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. மே 2020 இல் பெங்களூருவில் இந்த சேவை அறிமுகமானது. தொடர்ந்து மார்ச் 2021க்குள் இந்த சேவையானது பெங்களூரு நகரம் முழுவதும் கிடைக்கத் தொடங்கியது. அமேசானில் இந்த சேவை மட்டும் நிறுத்தப்படவில்லை. மற்றொரு சேவையும் நிறுத்தப்பட இருக்கிறது.

அமேசான் அகாடமி சேவை
இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியையும் நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்தது. இதை அறிவித்த அடுத்த ஒரு நாளுக்கு பிறகு Amazon Food சேவையும் மூடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. அமேசான் அகாடமி சேவையானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் அறிமுகமானது.

ரிவ்யூக்களுக்கு கட்டுப்பாடு
அதேபோல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் போலி மதிப்புரைகள் மற்றும் சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. போலி மதிப்புரை என்றால், ஒரு தயாரிப்பின் மீது வழங்கப்படும் போலியான ரிவ்யூவாகும். ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்த அல்லது அதன் மதிப்பைக் குறைக்க ஆன்லைன் தளங்களில் பல ஆயிரம் கணக்கான ரிவ்யூக்கள் பதிவிடப்படுகின்றன. இதில் சில மதிப்புரைகள் உண்மையாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக ரிவ்யூக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அரசு நடவடிக்கை
ஆனால், பெரும்பாலான நேரங்களில் போலியான மற்றும் எதிர்மறையான ரிவ்யூவ்கள் வியாபார நோக்கத்திற்காக ஆன்லைன் தளங்களில் பதிவிடப்படுகின்றன. இது போன்ற போலி ரிவ்யூவ் காரணமாக சில நேரங்களில் இது வாங்குபவர்களைத் தவறாக வழிநடத்துகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதை நிவர்த்தி செய்யவே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

புதிய கட்டமைப்பு உருவாக்க திட்டம்
பொருட்கள் மற்றும் சேவைகளைச் சரிபார்க்க நுகர்வோர் மதிப்புரைகளைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கான புதிய கட்டமைப்பை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய அதிரடி நடவடிக்கையின் கீழ் கூகுள், மெட்டா, இன்ஸ்டாகிராம், அமேசான், பயண இணையதளங்கள் மற்றும் உணவு விநியோக பயன்பாடுகள் போன்ற அனைத்து ஆன்லைன் தளங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை தரம் இதன்மூலம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications