போட்டி வேண்டாம்! பாதை போதும்! மாத சம்பளம் வாங்காத Zomato டெலிவரி பாய்க்கு ரூ.1.5 கோடி வருமானம்!
வாழ்க்கையில் யாருடனும் போட்டிப்போடாமல் எனக்கான பாதையை உருவாக்கி, அதில் பயணித்த தைரியமே எனது வெற்றிக்கான முக்கிய காரணம் என்று சொமோட்டோ (Zomato) மூலம் நாளொன்றுக்கு ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டிவரும் தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) சொல்கிறார். இதுகுறித்த விவரம் இதோ.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தீபிந்தர் கோயல், டெல்லி ஐஐடியில் பட்டம்பெற்று, அவருடன் படித்த மாணவர்களுடன் 2008ஆம் ஆண்டு ஃபுடீபே (Foodiebay) என்னும் ஃபுட் டெலிவரி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் நஷ்டத்தில் சென்றபோதும், தீபிந்தர் கோயலின் விடாமுயற்சி மெல்ல மெல்ல லாபத்தை பெற வைத்தது.

அதன்பின், 2010ஆம் ஆண்டில் ஃபுடீபே என்ற பெயரை சொமேட்டோ என்று மாற்றினார். இந்த சொமோட்டோ ஆப் ( Zomato App) மூலம் ஃபுட் டெலிவரி தொடங்கியது. இதற்கு பின்பு, அவருக்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 2021ஆம் ஆண்டில் அவரது வருமானம் ரூ.1500 கோடி ரூபாயை கடந்தது. சொமேட்டோ நிறுவனத்தின் நிகர மதிப்பும் ரூ.5,345 கோடியை எட்டியது. இப்படி ஆண்டுக்கு ஆண்டு லாபம் அதிகரித்தது.
இதனிடையே கொரோனா காலத்தில், சொமேட்டோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் முக்கிய காரணமாக இருந்த டெலிவரி பாய்களுக்கு உதவி செய்ய எண்ணிய தீபிந்தர் கோயல், தன்னுடைய இஎஸ்ஓபி (ESOP) பங்குகளில் ரூ.700 கோடியை சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷனுக்கு (Zomato Future Foundation) வழங்கினார்.
இந்த பவுண்டேஷன் மூலம் சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.50,000 வழங்கப்படும். அதுவே, 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், ஆண்டுக்கு ரூ.1,00,000 லட்சம் வழங்கப்படும்.
இதேபோல 12 ஆம் வகுப்பை முடிக்கும் பிள்ளைகளுக்கு உதவித்தொகை, பட்டப்படிப்பை முடித்தால் உதவித்தொகை என்று வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், விபத்து காப்பீடும் எந்தவித பாலிசிகள் இல்லாமலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், 2022ஆம் ஆண்டில் இருந்து தீபிந்தர் கோயலுக்கு ரூ.1,111 கோடி இஎஸ்ஓபி பெற்றுவருகிறது. இந்த தொகை நாளொன்றுக்கு ரூ.1.5 கோடியை எட்டுகிறது.
இப்போது, சோமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.66,874 கோடியாகும். இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டிய பின்பும், தீபிந்தர் கோயல் ஊழியர்களுடன் நெருங்கி பழகி வருகிறார். மாதத்தில் பலமுறை சக சோமேட்டோ டெலிவரி பாய்களைப் போலவே, தானும் ஃபுட் டெலிவரிக்கு சென்று வருகிறார். இதற்காக அவர் மாத சம்பளம் பெறுவது கிடையாது.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெறும் நபர்களின் கதைகளை வெளியிடும் நிறுவனம் ஒன்று, இவரது கதையையும் வெளியிட்டுள்ளது. இது வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இதில், அவரது வாழ்க்கை பயணம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவாக பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள், அதன்பின்பு மருத்துவம் அல்லது ஐஐடியில் சேருவதையே விரும்புவார்கள்.
ஆனால், நான் படிப்பில் சிறந்தவன் அல்ல, படிப்பை தொடர வேண்டாம் என்ற நினைத்தேன். ஆனால், எனது பெற்றோரின் வற்புறுத்தலின்படி டெல்லி ஐஐடியில் படிப்பை தொடங்கினேன். அங்கு மிகுந்த அறிவார்ந்த மாணவர்கள் என்னுடன் இருந்தனர். எனக்கு அவ்வளவு அறிவு கிடையாது, என்பதால் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டேன். ஆனால், அவர்களிடம் போட்டிப்போட்டு வாழ்க்கை பந்தயத்தில், நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.
எனக்கான பாதையை உருவாக்கி, யாருடனும் என்னை ஒப்பிடாத வகையில், தொழில் தொடங்க முடிவு செய்தேன். இப்போது இங்கு இருக்கிறேன். சொல்லப்போனால், நான் யாருடனும் போட்டி போட்டு தோல்வியடைய விரும்பாத காரணத்தாலேயே வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்தது" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








