சொமாட்டோ 2020: சார் வௌவால் சூப் கிடைக்குமா?., இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு விவரம்!
2020 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 22 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு, இனிப்பு வகைகள் குறித்து சொமாட்டோ வெளியிட்ட தகவலை பார்க்கலாம்.

அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர்
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யவே விருப்பம்
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

ஸ்விக்கி, சொமாட்டோ சலுகைகள்
குறிப்பாக ஆன்லைன் டெலிவரிகளில் முக்கியமான ஒன்று உணவு வகைகள். ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன. அதன்படி இந்தாண்டு கொரோனா பரவலால் உலக நாடுகள் பாதிப்படைந்து பூட்டுதல் அறிவிக்கப்பட்டாலும் பின் பாதுகாப்பு வழிமுறைகளோடு ஆன்லைன் டெலிவரியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் 22 பிரியாணி
இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவு பிரியாணி என்றால் அது ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அதன்படி 2020 ஆம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் 22 பிரியாணி ஆர்டர்கள் வந்ததாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் விற்பனை குறித்த சொமாட்டோ வெளியிட்ட தகவல்களை விவரமாக பார்க்கலாம்.

பிரியாணிக்கு அடுத்தப்படியாக பீட்சா
சொமாட்டோ அறிவிப்பின்படி பிரியாணிக்கு அடுத்தப்படியாக பீட்சா அதிக ஆர்டர்களை பெற்றுள்ளது. சொமாட்டோ வெளியிட்ட தகவின்படி மே மாதத்தில் 4.5 லட்சத்திற்கு அதிகமான பீட்சாக்களும், ஜூலை மாதத்தில் 9 லட்சத்திற்கு அதிகமான பீட்சாக்களும், செப்டம்பர் மாதத்தில் 12 லட்சத்துக்கு அதிகமான பீட்சாக்களும், நவம்பர் மாதத்தில் 17 லட்சத்திற்கு அதிகமான பீட்சாக்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் உள்ள ஒரு வாடிக்கையாளர்கள் இந்தாண்டு மட்டும் 369 பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாளுக்கு நான்கு ஆர்டர்கள்
பிற நகரங்களை ஒப்பிடும்போது டெல்லியில் அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. அதேபோல் பெங்களூருவை சேர்ந்த யாஷ் என்ற நபர் மட்டும் 2020 ஆம் ஆண்டில் 1380 ஆர்டர்களை செய்துள்ளார். இது கிட்டத்தட்ட சராசரியாக ஒரு நாளுக்கு நான்கு ஆர்டர்கள் ஆகும்.

அதிகம் விரும்பப்பட்ட இனிப்பு உணவு
தீபாவளி திருநாள் வாரத்தில் மட்டும் ஒரு லட்சம் ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குலாப் ஜாமுன் அதிகம் விரும்பப்பட்ட இனிப்பு பொருளாக உள்ளது. அதேபோல் மும்பையில் அதிக அளவில் குலாப் ஜாமுன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
வௌவால் சூப் கிடைக்குமா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் 414 பேர் வௌவால் சூப் இருக்கிறதா என சொமாட்டோ மூலம் தேடியுள்ளனர். உலக நாடுகளை உலுக்கிய கொரோனா தொற்று வௌவால் சூப் மூலமாக பரவியிருக்கலாம் என ஒரு தகவல் பரவியதன் காரணமாக வேடிக்கையாக இதை தேடியிருக்கலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications