ஒருவரின் உண்மை கதை: படிப்பு: 10-வது., "செக்யூரிட்டு டூ டெக் அதிகாரி": வைரலாகும் ஜோஹோ ஊழியர் வாழ்க்கை பயணம்!
ஒருசிலரின் கதைகள் கேட்கும் போது நம்மை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதோடு நம்மை முன்னோக்கி உந்தித்தள்ளும். சாமானியர் ஒருவர் தன் திறமையால் வாழ்க்கையில் வெற்றிப் பெற பட்ட கஷ்டங்களை கேட்கும் போதும் அதை அவர் எப்படி எதிர்கொண்டார் வெற்றிப் பெற்றார் என கேட்கும்போதும் நமக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். இதுபோன்ற பலரின் கதை திரைப்படமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தளவிலான ஒருவரின் கதையைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஜோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டி
10 ஆம் வகுப்பு படித்து ஜோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி புரிந்த ஒருவர் அதே நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக உருவெடுத்துள்ள கதை பலரையும் பூரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த கதை லிங்கிட்இன்-ல் பதிவேற்றப்பட்டதையடுத்து லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்று வருகிறது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஜோஹோ. தற்போது ஜோஹோ நிறுவனம் உலகம் முழுக்க செயல்பட்டு வருகிறது. சாதாரனமாக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜோஹோ நிறுவனம், தற்போது உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. தமிழக கிராமப்புறத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ் ஆகிய இருவரும் 1996 ஆம் ஆண்டில் ஜோஹோவை ஆரம்பித்துள்ளனர்.

உலகம் முழக்க வாடிக்கையாளர்கள்
ஜோஹோ நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஜோஹோ நிறுவனத்துக்கு தற்போது உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் உள்ளனர். பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு ஸ்ரீதர் வேம்பு இந்த இடத்திற்கு ஜோஹோவை வளர்த்திருக்கிறார். பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கும் ஜோஹோ சவால்விடும் விதமாக தற்போது இருக்கிறது.

திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு
ஜோஹோ நிறுவன ஊழியர்களின் பொதுவான வார்த்தை, திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே இங்கு வாய்ப்பிருக்கும் என்பதாகும். அதை பரைசாற்றும் வகையில் தற்போது ஜோஹோ நிறுவன ஊழியர் ஒருவரின் கதை பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. ஜோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து அதே நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக மாறியவரின் கதைதான் அது.

செக்யூரிட்டி பணியில் சேர்ந்த அப்துல்
அப்துல் ஆலிம் என்பவர் தனது கதையை லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில், 2013 ஆம் ஆண்டில் வெறும் 1000 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். ரயில் டிக்கெட் போக்குவரத்து செலவிற்கு 800 ரூபாய் செலவாகிவிட்டது. இரண்டு மாதங்கள் தெருக்களில் சுற்றித்திரிந்தேன். பின் இறுதியாக பாதுகாப்பு அதிகாரி(செக்யூரிட்டி) ஆக பணி கிடைத்தது.

10 ஆம் வகுப்பு படித்த அப்துல்
செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஷிபு அலெக்சிஸ் என்ற ஊழியருடன் நட்பாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஷிபு என்ன யோசித்தார் என தெரியவில்லை, எனது படிப்பு மற்றும் எனது கணினி அறிவு குறித்து அவர் என்னிடம் விசாரித்தார். 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும் பள்ளியில் எச்டிஎம்எல் கற்றுக் கொண்டதாகவும் கூறினேன். இதை கேட்ட ஷிபு, மேலும் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார்.

8 மாதங்களில் ஒரு செயலி உருவாக்கம்
இதை கேட்டதும் தனக்கு (அப்துல் அலிம்) மென்பொருள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசை வந்தது. தினமும் 12 மணிநேர செக்யூரிட்டி பணியை முடித்துவிட்டு மூத்த அதிகாரி ஷிபுவிடம் கோடிங் கற்றுக் கொண்டேன். கோடிங் மீது அதிக ஆர்வம் வந்து தொடர்ந்து கற்றுக் கொண்டேன். சரியாக 8 மாதங்களுக்கு பிறகு சொந்தமாக ஒரு செயலி ஒன்றை உருவாக்கினேன். இதை ஷிபுவிடம் காட்டும்போது, அப்துல் அலிம் திறமையை கண்டு ஷிபு ஆச்சரியம் அடைந்துள்ளார்.

திறமைக்கு மட்டுமே வாய்ப்பு
ஜோஹோவில் திறமைக்கு மட்டுமே வாய்ப்பு எனவும் கல்லூரி பட்டம் எல்லாம் தேவையில்லை எனவும் அப்துல் அலிம் உருவாக்கிய செயலியை, ஷிபு தனது மேனேஜரிடம் காண்பித்துள்ளார். இதை மிகவும் விரும்பிய ஷிபு மேனேஜர் தன்னை நேர்காணலுக்கு அழைத்ததாக அப்துல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அப்துல் அலிம் கூறுகையில், நான் எந்த கல்லூரிக்கும் செல்லவில்லை, 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்தேன் என்பதால் நேர்காணல் சிறப்பாக செய்ய மாட்டேன் என நினைத்தேன். ஆனால் ஜோஹோவில் தங்களுக்கு கல்லூரி பட்டம் தேவையில்லை எனவும் இங்கே முக்கியமானது உங்கள் திறமை மட்டும்தான் என கூறினார்கள்.

ஜோஹோவில் கோடர் பணி
நேர்காணல் நாள் வந்தது, நேர்காணலில் பதில் அளித்தேன் ஜோஹோவில் கோடர் ஆக பணியில் அமர்த்தப்பட்டேன் என கூறினார். இது ஜோஹோ கார்ப்பரேஷன்-ல் எனது 8-வது ஆண்டு என கூறினார். 8 வருடங்கள் கழித்து அப்துல் அலிம் தனது வெற்றி பயணம் குறித்த கதையை லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு அனைத்து அறிவு மற்றும் படிப்பினைகளுக்காக ஷிபு அலெக்சிஸ்-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் தன்னை நிரூபிக்க அனுமதித்ததற்காக ஜோஹோ கார்ப்பரேஷனுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இறுதியாக கற்றலைத் தொடங்க தாமதம் ஒருபோதும் இல்லை என பதிவிட்டுள்ளார். "அப்துல் அலிம் பதிவிட்ட பதிவு"
Source: Social Media


Click it and Unblock the Notifications