ஒரே மாதத்தில் ZOHO Arattai ஆப்பிற்கு இப்படி ஆகிடுச்சே.. இப்போ நிலைமையை பாருங்க!
வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஜோஹோ நிறுவனத்தின் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது கூகுள் பிளே மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் - இந்தியாவின் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெறும் ஒரு மாதத்திற்குள் வெளியேறி உள்ளது.
ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான அரட்டை ஆப்பிற்கு ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி ஆனது மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப்பிற்கு இந்தியாவில் இருக்கும் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது; அதற்கு போட்டியாக எந்த ஆப் வந்தாலும் அதற்கான "போர்" கடுமையாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, அரட்டை ஆப் ஆனது கூகுள் பிளேவில் 105 வது இடத்தையும், ஆப் ஸ்டோரில் 123 வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் நடுப்பகுதியில் அரட்டை ஆப் வைத்திருந்த முதல் இடத்துடன் ஒப்பிடும் போது இது கடுமையான சரிவாகும் என்று மனிகண்ட்ரோல் (Money Control) தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் (Apps and Games) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தரவரிசைகளின் அடிப்படையில், அரட்டை ஆப் ஆனது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 128 வது இடத்தையும், கூகுள் பிளே ஸ்டோரில் 150 வது இடத்தையும் பிடித்து உள்ளது.
நினைவூட்ட வண்ணம் - வாட்ஸ்அப்பில் அறிமுகமான தனியுரிமை கொள்கை மாற்றங்கள் (Privacy policy changes) குறித்த பரபரப்பு கிளம்பிய போது, 2021 ஆம் ஆண்டு அரட்டை ஆப் ஆனது ஜோஹோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வாட்ஸ்ஆப்பிற்கான ஆல்டர்நேட்டிவ் தேடிய பலருக்கும் (அந்த நேரத்தில்) அரட்டை ஆப் ஒரு நல்ல தேர்வாக இருந்தது
அதன்பின்னர் நீண்ட காலம் கழித்து, நுகர்வோர் மத்தியில் அரட்டை மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்தது. அரட்டை ஆப்பின் பதிவிறக்கங்கள் கடந்த அக்டோபர் 2025 இல் 13.8 மில்லியனாக உயர்ந்தன. இது செப்டம்பரில் ருந்த 2.63 மில்லியனை விட பல மடங்கு அதிகமாகும். இருப்பினும், இந்த உயர்வு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தது
நவம்பரில் (நவம்பர் 4 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி) பதிவிறக்கங்கள் வெறும் 1,95,519 ஆக குறைந்துள்ளன. இது "கடந்த மதம் இருந்த சலசலப்பு இந்த மாதம் இல்லை" என்பதை குறிக்கிறது. மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையும் கூட இந்த போக்கை பிரதிபலிக்கின்றன. அரட்டை ஆப்பின் மன்திலி ஆவரேஜ் யூஸர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 1.17 மில்லியனில் இருந்து அக்டோபரில் 4.35 மில்லியனாக உயர்ந்து, நவம்பரில் 4.09 மில்லியனாக சற்றே குறைந்துள்ளது.
மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் 'சுதேசி' தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அரட்டை ஆப் மீதான திடீர் எழுச்சி ஏற்பட்டு இருக்கலாம். கடந்த சில மாதங்களில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் அரட்டை மற்றும் ஜோஹோவின் தயாரிப்புகளை ஆதரித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அரட்டை ஆப் ஆனது ஒரு ஸ்பைவேர்-ப்ரீ மெசஞ்சர் ஆப் (Spyware‑free Messenger App) ஆக அறியப்படுகிறது. அதாவது இது தனியுரிமை உணர்வுள்ள பயனர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் அரட்டை ஆப்பில் மிகவும் முக்கியமான ஒரு தனியுரிமை அம்சம் இல்லை. அது இ2இஇ (E2EE) என்கிற எண்ட் டூ என்ற என்க்ரிப்டட் (End-to-end encrypted) அம்சமாகும்.
இ2இஇ என்றால் என்ன? இந்த அம்சத்தின் கீழ் ஒரு மெசேஜை அனுப்பிய அனுப்புநரும், அந்த மெசேஜை பெறும் பெறுநரும் மட்டுமே அந்த மெசேஜ்களை படிக்க முடியும் - வேறு யாரும், மெசேஜிங் சேவை வழங்குநர் கூட அதை படிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு முக்கியமான அம்சம் அரட்டை ஆப்பில் இல்லை என்கிற விஷயம், அக்டோபர் மாத நடுப்பகுதியில் தான் தெரிய வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுகூட அரட்டை ஆப்பின் திடீர் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








