AI சமூகத்தை சீர்குலைக்கும்.. மனிதர்களால் தடுக்க முடியாது.. Zerodha CEO எச்சரிக்கை
ஏஐ (AI) வருகையால் பல்வேறு மனித வேலைகள் பறிபோகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஜீரோதா சிஇஓ நிதின் காமத் (Zerodha CEO Nithin Kamath) மனிதர்களால், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) உடன் போட்டிப்போட முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த விவரம் இதோ.
20ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மனித வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவர காத்திருக்கிறது. இப்போது, தொழில்நுட்பத்தை கடந்து அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. ஏஐ காரணமாக பல்வேறு மனித வேலைகளும், புதிய வேலை வாய்ப்புகளும் பறிபோகும் என்று மிகப்பெரும் மனிதவள ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மாறாக மனித வேலைகளை குறைத்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எப்படி லாபத்தை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே, பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு காலூன்றி விட்டது. இதனால், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கும் முக்கிய 10 வேலைகளை ஏஐ அழிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம் (World Economic Forum (WEF)) ஆய்வறிக்கையில், டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry), காசாளர் (cashier), கணக்கேடுகள் பராமரிப்பாளர் (Bookkeeping) உள்ளிட்ட 10 முக்கிய வேலைகள் ஏஐ காரணமாக காணமல்போகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியாகி சில நாட்களில், பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா (Vijay Shekhar Sharma) அந்த நிறுவனத்தில் கஸ்டமர் கேர் (Customer Care), ஃபிராடு டிடெக்ஷன் (Fraud Detection), கஸ்டமர் ஆன்போர்டிங் (Customer Onboarding) துறைகளில் ஏஐ பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இப்படி தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவரும் ஏஐ தொழில்நுட்பத்துடன் மனிதர்களால் போட்டிபோட முடியாது என்றும் வேலைகள் பறிபோவதை தடுக்க முடியாது என்றும் ஜீரோதா சிஇஓ நிதின் காமத் தெரிவித்திருப்பது வேலை தேடிவரும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதின் காமத் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகம் முழுவதும் ஏஐ ஆதிக்கம் செலுத்திவருவதால், ஊழியர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. ஆனால், ஜீரோதா நிறுவனத்தில் ஏஐ காரணமாக யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
ஆனால், ஏஐ வருகை வேலைவாய்ப்புகளை பறித்து சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பது உண்மை. சொல்லப்போனால், மனிதர்களால் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவார்ந்த எந்திரங்களுடன் போட்டிபோட முடியாது. இருப்பினும், முதலாளித்துவம் விரைவாக செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளும். வருங்காலத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து, ஏஐ தொழில்நுட்பத்தை காரணம் காட்டலாம். இது பொருளாதார சமத்துவமின்மையை ஊக்குவிக்கும். இது மனித குலத்திற்கு நல்லதல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படி பல தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பாளர்கள் ஏஐ குறித்து கவலைகொள்கின்றனர். இது வேலை தேடிவரும் இளைஞர்களுக்கும், ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு என்று அரசாங்கங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் வரையறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








