மீன் தொட்டி விற்பனை செய்கிறதா Xiaomi? இது சாதாரண மீன் தொட்டி இல்லையாம்? வேறென்ன ஸ்பெஷல்?
ஸ்மார்ட் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சியோமி (Xiaomi). இதுவரை பயன்பாட்டில் இருக்கும் சியோமியின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றே சொல்லலாம்.
அந்த வரிசையில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்காகப் பிரத்தியேகமான ஸ்மார்ட் சாதனம் ஒன்றை சியோமி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. என்ன தான் நாய், பூனை, முயல் என்று செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் இருந்தாலும், மீன் வளர்ப்பிற்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது. இயற்கையுடன் இணைந்து வாழும் அனுபவத்தை அது தருவதால் மனச்சோர்வை நீக்குவதில் மீன் வளர்ப்பிற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

சின்ன-சின்ன, வண்ண-வண்ண மீன்கள் நீந்துவதைப் பார்க்கும் போது தானாக மனம் சாந்தி அடைவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். ஆனால் மீன் வளர்ப்பதில் இருக்கும் ஒரு சிரமம் அடிக்கடி, பிஷ்டேங்கை சுத்தம் செய்து, தொட்டியில் இருக்கும் தண்ணீரை மாற்றுவது தான். எது எதற்காகவோ ஸ்மார்ட் சாதனம் கண்டுபிடிக்கிறீர்கள், மீன் தொட்டியைப் பராமரிக்க ஒன்று கண்டுபிடியுங்கள் என்று யாரோ புலம்பியது சீனாகாரர்களுக்கு கேட்டுவிட்டது போலும்.
அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னிலை வகிக்கும் சீனா நிறுவனமான சியோமி, இப்போது ஸ்மார்ட் மீன் தொட்டி ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீன் தொட்டியில் இருக்கும் அம்சங்களைப் பற்றித் தெரிந்தால், நீங்களே அசந்து போய்விடுவீர்கள். தொழில்நுட்பமும் இயற்கையும் ஒன்றிணைவதை இந்த ஸ்மார்ட் மீன் தொட்டி மூலம் நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
மிஜியா ஸ்மார்ட் ஃபிஷ் டாங்க் (Mijia Smart Fish Tank) என்று அழைக்கப்படும் இந்த இந்த மீன் தொட்டியை மிஜியா மொபைல் ஆப்ஸ் மூலம் நாம் கன்ட்ரோல் (Control) செய்யலாம். சுமார் 20 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டுள்ள இந்த மிஜியா ஸ்மார்ட் மீன் தொட்டியின் சிறப்பம்சமே, அதன் 5 அடுக்கு ஃபில்ட்டர் சிஸ்டம் (5-fold Filter System) மற்றும் ரிமோட் உணவு டெலிவரி தான் (Remote food delivery).

16:9 அளவு கொண்ட இந்த ஸ்மார்ட் மீன் தொட்டியில், இயற்கை சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் 24 ஹை ரெசொல்யூஷன் (High resolution) கொண்ட வெள்ளை நிற LED பீட்ஸ்களும் (Beads), 16 RGB நிறம் கொண்ட LED பீட்ஸ்களும் பொருத்தப்பட்டுள்ளது. 91.3% அதீத ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கண்ணாடியினால் இந்த மீன் தொட்டியின் சுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் தொட்டியின் அழகு அப்படியே இயற்கை போல வெளிப்படுத்தப்படும்.
மீன் தொட்டியின் பின்பக்கம் இருக்கும் 5 அடுக்கு ஃபில்ட்டர் சிஸ்டமானது தண்ணீரைச் சுத்தம் செய்து, அதில் இருக்கும் பேக்டீர்யா நுண்ணுயிரிகளை, களை எடுத்து, மீன்களுக்கு சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது. இதன் காரமாக அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டியது இருக்காது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மீன் தொட்டியின் தண்ணீரை மாற்றினாலே போதுமானதாக இருக்கும். மீன் வளர்ப்பவர்களுக்கு இது நிம்மதியை அளிக்கிறது.
மேலும், உணவு தொட்டியில் ஒருமுறை மீன்களுக்கான உணவுகளை நிரப்பி, எந்த இடைவெளியில் எவ்வளவு உணவு கொடுக்க வேண்டும் என்ற தகவல்களை மிஜிலி ஆப்ஸ் இல் பதிவு செய்தால் போதும், சரியான நேரத்தில் மீன்களுக்கு உணவு வழங்கப்படும். ஒருமுறை உணவு தொட்டியை நிரப்பினால் சுமார் 3 மாதங்கள் வரை அந்த உணவு நீடிக்குமாம்.

இவ்வளவு அதிநவீன அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட் மிஜிலி மீன் தொட்டியில் 10-15cm நீளமுள்ள 5-6 மீன்கள் அல்லது, 6-9cm நீளமுள்ள 6-8 மீன்கள் அல்லது, 3-5cm நீளமுள்ள 8-12 மீன்களை வளர்த்துப் பராமரிக்க முடியும். தொட்டியில் வளர்க்க மீன்களை தேர்வு செய்யும்போது அவற்றின் நீளம் மற்றும் உருவத்தில் அதிக வேறுபாடு இல்லாதவாறு தேர்வு செய்வது மீன்களுக்கு நல்லது என்று சியோமி அறிவுறுத்தியுள்ளது.
க்ரௌட் ஃபண்டிங் மூலம் சேர்த்த பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிஜிலி ஸ்மார்ட் மீன் தொட்டியானது சீனாவில் சுமார் 57 டாலர், அதாவது இந்திய ரூபாயில் சுமார் 4700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மிஜிலி ஸ்மார்ட் மீன் தொட்டி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சியோமி இந்தியாவில் அதன் தயாரிப்பு பட்டியலை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








