Xiaomi வாடிக்கையாளர்களுக்கு அடித்த லக்! இந்த போன் இருந்தா எக்ஸ்ட்ரா 2 வருட வாரண்டி!
Xiaomi நிறுவனம் இந்தியாவிலுள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, குறிப்பிட்ட ரெட்மி மற்றும் சியோமி போன்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 வருட உத்தரவாதம் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. எந்த போன்களுக்கு இது பொருந்துமென்று பார்க்கலாம்.
சியோமி (Xiaomi) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிஸ்கார்ட் சேனல் வழியாக பிராண்டின் புதிய அறிவிப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, இந்தியாவில் ஐந்து ஸ்மார்ட்போன்களுக்கான உத்தரவாதத்தை சியோமி தற்போது நீட்டித்துள்ளது. எந்த 5 ஸ்மார்ட்போன்களின் மீது இந்த உத்தரவாத நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாமா?

சியோமியின் அதிகாரப்பூர்வ தகவலின் படி ரெட்மி நோட் 10 ப்ரோ (Redmi Note 10 Pro), ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 10 Pro Max), மி 11 அல்ட்ரா (Mi 11 Ultra) மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ (POCO X3 Pro) ஆகியவற்றின் மீது இந்த உத்தரவாதம் செல்லுபடியாகும்.
மதர்போர்டு செயலிழப்பு மற்றும் கேமரா செயலிழப்பு போன்ற சிக்கல்களும், பல புகார்களும் தொடர்ந்து வடிக்கையாளர்களால் எழுப்பப்படுகிறது. இதனால், இந்த போன்களுக்கான உத்தரவாதத்தை நீட்டிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரண்டி நீட்டிப்பு இந்த போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்ற, அதே நேரத்தில், வாடிக்கையாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கூறிய சாதனங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி கேமராக்கள் அல்லது மதர்போர்டுகள் தொடர்பான சிரமங்களை எதிர்கொள்ளும் எந்தவொரு வாடிக்கையாளருக்கும், உத்தரவாதத்தின்படி இந்த சிக்கல்களைத் தீர்க்கவும் சரிசெய்யவும் Xiaomi பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் போனின் இன்வாய்ஸ் பில் உடன் அருகிலுள்ள Xiaomi சேவை மையத்தில் சிக்கல்களை இலவசமாக சரி செய்துகொள்ளலாம்.

நிறுவனம் எந்த கூடுதல் செலவின்றி பழுதுபார்ப்பு அல்லது மாற்றீடுகளை வழங்கும். எவ்வாறாயினும், உத்தரவாதக் கவரேஜுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களை நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது ரூட் செய்யப்பட்ட ஃபோன்கள், லிக்விட் டேமேஜ், போன் பாடி சேதம் போன்ற சிக்கல்களை வாடிக்கையாளர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டத்துடன் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக, சியோமி சிஸ்டம் யுஐ பதிலளிக்காதது மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸில் முன் கேமரா செயலிழப்பு போன்ற இரண்டு குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்க்கும். POCO X3 Pro ஐப் பொறுத்தவரை, Xiaomi குறிப்பாக பவர்-ஆன் சிக்கலைத் தீர்க்கும். Xiaomi இந்தியாவின் டிஸ்கார்ட் சேனல் மூலம் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், சியோமி பிராண்ட் விரைவில் அதன் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சேனல்களிலும் இந்த தகவலை வெளியிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்களிடம் இந்த போன்கள் இருந்தால், உடனே அருகில் உள்ள சியோமி சர்வீஸ் சென்டர் சென்று, உங்கள் போனிற்கான உத்தரவாதத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். இந்த தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








