Google Pay-ல் பணத்தை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இப்படி செஞ்சா திரும்ப வந்திடும்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் ரொக்கமாகச் செலவு செய்பவர்களை விட டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த யுபிஐ (UPI) மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது.
அதேசமயம் யுபிஐ பயன்படுத்தும் மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்பவர்கள் குறிப்பிட்ட நபருக்குப் பணம் அனுப்புவதற்குப் பதிலாக, சிறிய பிழையினால் வேறொரு நபரின் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி விடும் அபாயம் உண்டு.

குறிப்பாக நம்மில் பலரும் இதுபோன்ற தவறை ஒரு முறையாவது செய்திருப்போம். அதுபோல் தவறுதலாக வேறொரு நபருக்குப் பணத்தை அனுப்பி இருந்தால் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்ற வழிமுறைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலி மூலம் தவறுதலாக ஒரு நபருக்கு பணம் அனுப்பினால் முதலில் அந்த நபரை தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்ப அனுப்ப வேண்டுவதே மிகவும் விரைவான மற்றும் எளிமையான வழிமுறையாக இருக்கும்.
அதுவும் நீங்கள் முகம் தெரியாத நபருக்கு பணம் அனுப்பி இருந்தால் அவரை தொடர்புகொண்டு மரியாதையாகப் பேசி, தவறுதலாகப் பணம் அனுப்பிய விவரத்தை எடுத்துக் கூறி பணத்தைத் திரும்ப அனுப்புமாறு வேண்டலாம். குறிப்பாக இதுதான் மிகவும் எளிமையான மற்றும் விரைவான வழியாக இருக்கும்.
2.ஒருவேளை பணத்தை தவறுதலாகப் பெற்றுக் கொண்டவர் பதிலளிக்கவில்லை என்றால் கூகுள் பே, போன்பே, பேஎடிம் என எந்த யுபிஐ செயலி மூலம் நீங்கள் பணம் அனுப்பி இருந்தாலும் சரி அந்த செயலிகளின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு உதவியை நாடலாம். குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளும் முன் கீழ்க்கண்ட விவரங்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பண பரிமாற்றம் செய்த ஐடி(Transaction ID)
- பண பரிமாற்றம் செய்த தேதி மற்றும் நேரம்
- பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை
- பணம் பெற்றவரின் யுபிஐ-ஐடி விவரம்
இந்த விவரங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் தெரிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கான உதவி கிடைக்கலாம்.
3. வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியினால் உங்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நீங்கள் NPCI எனப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-விடம் புகார் அளிக்க முடியும். அதாவது Npci.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் கேட்கப்படும் அணைத்து விவரங்களையும் முறையாக உள்ளீடு செய்த பின் உங்களது புகாரை பதிவு செய்யலாம்.
அதுவும் தவறுதலாக செய்யப்பட்ட பணப்பரிமாற்ற தொகையை 24-48 மணி நேரத்தில் மீண்டும் உரிய நபரின் கணக்கில் செலுத்த வேண்டும் என்பது விதி. இரண்டு வங்கி கணக்குகளும் ஒரே வங்கியைச் சார்ந்ததாக இருந்தால் இன்னும் விரைவாக இந்த செயல்முறை முடிந்துவிடும்.

யுபிஐ செயலிகளில் தவறுகள் ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது?
முதலில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளின் பணப்பரிமாற்றம் செய்யும்போது பணம் அனுப்பும் யுபிஐ அல்லது போன் நம்பரை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
யுபிஐ ஐடியை பயன்படுத்துவதற்குப் பதிலாக கியூஆர் கோடு (QR-Code) பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும்.
தெரியாத புதிய நபர்கள் கணக்கிற்குப் பெரிய தொகையில் பணம் அனுப்ப வேண்டி இருந்தால், முதலில் சிறிய தொகை அதாவது ரூ.1 அல்லது ரூ.2 அனுப்பி பணம் எதிர் முனையில் இருப்பவரிடம் சென்று சேர்வதை உறுதி செய்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








