உலகின் முதல் எஸ்எம்எஸ் எப்போது அனுப்பப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?
எஸ்எம்எஸ் அல்லது குறுஞ்செய்தி சேவை என்பது நம் வாழ்க்கையில் எந்தளவிற்கு முக்கிய பங்கை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இந்த இடத்தை தற்போது வாட்ஸ்அப் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் முதன் முதலாக எப்போது எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருக்கும் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா? கடந்த 1992 டிசம்பர் 3 ஆம் தேதி அன்று தான் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. உலகின் இந்த முதல் எஸ்எம்எஸ் அனுப்பியவர் நீல் பாப்வொர்த் என்பவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு நீல் பாப்வொர்த், 22 வயது உள்ள சாஃப்ட்வேர் புரோகிராமராக இருந்தார். இந்த முதல் குறுஞ்செய்தியை, தனது கம்ப்யூட்டரில் இருந்து சக பணியாளரான ரிச்சார்டு ஜார்விஸ் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.
ஒரு குறுஞ்செய்தி சேவையை (எஸ்எம்எஸ்) உருவாக்கும் பணியில் டெவலப்பர் மற்றும் டெஸ்ட் என்ஜினியராக, தனது வாடிக்கையாளரான வோடவோர்ன் நிறுவனத்திற்காக பாப்வொர்த் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த 1992 டிசம்பர் 3 ஆம் தேதி அவரால் அனுப்பப்பட்டது தான் உலகின் முதல் குறுஞ்செய்தி ஆகும். அதில் "மெரி கிறிஸ்மஸ்" என்று சாதாரணமாக அனுப்பி இருந்தார்.
இது குறித்து பாப்வொர்த் கூறும் போது, "குறுஞ்செய்தி அனுப்புவது இவ்வளவு பிரபலமாகும் என்பது குறித்து அன்று எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதன்மூலம் இமோஜிஸ் மற்றும் மெசேஜ் அப்ளிகேஷன்களை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது"
"முதல் குறுச்செய்தியை நான் தான் அனுப்பினேன் என்ற செய்தியை, எனது பிள்ளைகளிடம் சமீபத்தில் நான் தான் கூறினேன். கடந்த காலத்தை நான் திருப்பி பார்க்கும் போது, நான் அனுப்பிய அந்த கிறிஸ்மஸ் குறுஞ்செய்தி, மொபைல்போனின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் தருணம் என்பது தெளிவாகிறது" என்றார்.
இதற்கு ஒரு ஆண்டிற்கு பிறகு, அதாவது 1993 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் மூலம் மெசேஜ் வருவதை குறிக்கும் தனித்துவமான ஒரு பீப் சிக்னல் கொண்ட ஒரு எஸ்எம்எஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் இந்த குறுஞ்செய்திக்கு 160 எழுத்து என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆதி காலங்களில் இதைப் பயன்படுத்தியவர்கள் உரைப் பேச்சை ('txt spk') கண்டறிந்தார்கள். எடுத்துக்காட்டாக, சத்தமாக சிரித்துவிட்டேன் என்பதற்கு 'LOL' மற்றும் கீபோர்ட்டில் உள்ள எழுத்துக்களின் மூலம் உணர்வுகளை வெளியிடும் சின்னங்களான 'எமோட்ஐகான்ஸ்' ஆகியவை இதில் அடங்கும். இவை பின்நாட்களில் முதல் இமோஜியின் உருவாக்கத்திற்கு உந்துதலாக இருந்தன.
கடந்த 1999 ஆம் ஆண்டில், அதாவது நீல் பாப்வொர்த் முதல் எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பி ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், பல நெட்வொர்க்குகளின் இடையே குறுஞ்செய்திகளின் பரிமாற்றம் நிகழ ஆரம்பித்து, அதுவரை இல்லாத அளவிற்கு அவை அபரிமிதமாக பிரபலத் தன்மையைப் பெற்றன.
இன்று, 'மெரி கிறிஸ்மஸ்' என்ற மெசேஜ்கள், உலகம் எங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மூலம் குறுஞ்செய்திகளாகவும் வீடியோக்களாகவும் இமோஜிகளாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன.
முதல் உரைச் செய்தி அனுப்பி 25வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில், தனது 1992 ஆண்டின் கிறிஸ்மஸ் செய்தியை அதிக நவீன பதிப்பாக பாப்வொர்த் உருவாக்கி உள்ளார். இந்த முறை இதற்காக இமோஜிகளைப் பயன்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications