ஒரேயொரு "தாளி மீல்ஸ்" ரூ.90 ஆயிரமா? ஆஃபர்னு சொன்னா நம்பாதீங்க மக்களே!
ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும்படியான சம்பவம் வங்கி ஊழியர் ஒருவருக்கு நடந்துள்ளது. ஒரேவொரு தாளி (Thali) மீல்ஸ் வாங்க ஆசைப்பட்டு ரூ.90 ஆயிரம் பணத்தை அவர் இழந்துவிட்டார். இவரிடம் எப்படி ரூ.90 ஆயிரம் பறிக்கப்பட்டது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களில் பலருக்கு எந்த ஆப்-பில் எப்போது ஆஃபர் வரும், எந்த நேரத்தில் வாங்கினால் மலிவான விலையில் உணவுகள் கிடைக்கும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். இதனாலேயே வீட்டில் சமைத்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக இருந்துவரும் நிலையில், இப்போது திருமணமான தம்பதிகளும் ஆன்லைன் ஃபுட் கலாச்சாரத்துக்கு மாறிவருகின்றனர்.

ஏனென்றால், நமக்கு பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால், 15 முதல் 30 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்து விடுகிறது. இதனால், சமைப்பதற்கான நேரமும், கடைக்கு சென்று வாங்குவதற்கான நேரமும் மிச்சமாவதால் பலரும் அதையே விரும்புகின்றனர். இப்படி நாளுக்கு நாள் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றன.
இதன் மூலம் ஆன்லைன் மோசடி கும்பல்களும் தங்களது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டன. அப்படி பேஸ்புக்கில் (Facebook) வந்த பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ (Buy One Get One Free) ஆஃபரை நம்பி, வங்கி ஊழியர் ஒருவர் ரூ.90 ஆயிரம் பணத்தை பறிகொடுத்துள்ளார். டெல்லியை சேர்ந்த சவிதா ஷர்மா என்ற 40 வயது பெண் அதே பகுதியில் உள்ள வங்கியொன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆஃபர் விளம்பத்தை பார்த்துள்ளார்.
அதில், ஒரு தாளி மீல்ஸ் வாங்கினால் மற்றொரு தாளி மீல்ஸ் இலவசம் என்று பிரபல ஹோட்டல் நிறுவனத்தின் பெயர் மற்றும் மொபைல் நம்பருடன் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதை எப்படி பெறுவது என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆஃபருக்கு ஆசைப்பட்ட சவிதா ஷர்மா, அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கால் செய்துள்ளார்.
முதலில் யாரும் எடுக்கவில்லை. அதன்பின்பு அந்த நம்பரில் இருந்து இவருக்கு கால் வந்துள்ளது. அந்த நேரத்தில், சவிதா ஷர்மா, ஆஃபர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு எதிரே இருந்த நபர் எங்களது "சாகர் ரத்னா ஹோட்டல் ஆப்" மூலம் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும். அதை டவுன்லோட் செய்துவிட்டு ஆர்டர் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இதை நம்பிய சவிதா ஷர்மா, பிளே ஸ்டோரில் அந்த ஆப்பை தேடியுள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த நபருக்கு மீண்டும் கால் செய்துள்ளார். அப்போது அந்த நபர் ஒரு லிங்கை அனுப்பி, அதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த நபர் சொன்னபடியே இவரும் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை டைப் செய்துள்ளார்.
இதையடுத்து சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் பணம் பறிபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த சவிதா ஷர்மா அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் கால் எடுக்கவில்லை. அப்போதே சவிதா ஷர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதன்பின் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.


Click it and Unblock the Notifications








