பிஎஸ்என்எல் மீளுமா! காந்தி கணக்கு நீளுமா! மோடியின் ரூ.89 ஆயிரம் கோடி ஸ்கெட்ச்! யூசர்களின் தலையெழுத்து!
இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் முழுவீச்சில் 5ஜி சேவைக்கு மாறிவரும் வேளையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 4ஜி சேவைக்கான பணியை தொடங்கியிருக்கிறது. இந்த சேவை வரும்போது, நாடே 5ஜி சேவைக்கு மாறியிருக்குமே என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.
இந்தியாவின் மொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரப்பட்டியலை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (Telecom Regulatory Authority of India (TRAI)) 2019ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த விவரப்பட்டியலின் மூலம், அந்த ஆண்டின் மார்ச் மாதம் வரையில் மொத்தமாக 118 கோடி பேர் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துகின்றனர்.

இதில், 23.37 கோடி பேர் வோடபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்களாகவும், 36.69 கோடி பேர் ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களாகவும், 42.7 கோடி பேர் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களாகவும், 10 கோடி பேர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. அதோடு, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளையே பயன்படுத்துகின்றனர் என்பதும் உறுதியாகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஜூன் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3ஆவது புனரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதுபோதாது என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக மத்திய அரசு அதிகரித்து இருக்கிறது. இந்த ஒப்புதலுக்கு முன்னரே, நாடு முழுவதும் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மேம்படுத்தும் பணியை பிஎஸ்என்எல் தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 4ஜி டவர் மேம்படுத்தும் பணிகளும், 5ஜி டவர் அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. இதில் பல மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட இருக்கிறது. இதனால் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், பிரான்சைசி அலுவலகங்களிலும், சிம் கார்டு மேளாக்களிலும் முகாம்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வளவு நடந்தும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் ஆரவாரம் ஏற்படவில்லை. ஏனென்றால், ஜியோ 4ஜி சேவையை வழங்க தொடங்கிய காலம், முதலே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கும அரசு 4ஜி சேவையை வழங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்தும் 4ஜி சேவை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இப்போது வரும், அப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களே, மற்ற நிறுவனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் அளவுக்கு மத்திய அரசு பொறுமை காத்தது. இப்போது, மற்ற நிறுவனங்கள், 5ஜி சேவைக்கே மாறிவரும் சூழலில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைக்கான பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. இப்போது அறிவிக்கப்பட்ட 4ஜி சேவை கூட அனைத்து பகுதிகளிலும் கிடைக்குமா? அல்லது சும்மா பேருக்கு மட்டும் சில நகரங்களில் தொடங்கப்பட்டபின் வேகம் இழந்துபோகுமா? என்ற சந்தேகம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால், டெலிகாம் நிறுவனங்களின் முயல் வேகத்திலான போட்டிக்கு மத்தியில் ஆமைப்போல மெதுவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு தள்ளிக்கொண்டு போவது, வாடிக்கையாளர்களை இழக்க தயாராகிவிட்டது போலவே சிந்திக்க வைக்கிறது. இப்போது, இருக்கும் 10 கோடி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொலைத்தூரப் பகுதிகளிலும், மலைப் பிரசேதங்களிலும், மற்ற நிறுவனங்களின் சேவைகள் கிடைக்காத இடங்களில் மட்டுமே இருக்கின்றனர்.
இவர்களிடையே 4ஜி சேவைகள் வந்தாலும், அது மிகப்பெரும் வளர்ச்சியை எட்டாது. அதேபோல, மீதமுள்ள வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை செகண்டரியாக வைத்துக்கொண்டு மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளையே முதன்மையாக பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை 4ஜி சேவையை நாடு முழுவதும் பிஎஸ்என்எல் வழங்கினாலும், அன்றைய நேரத்தில் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைக்கு மாறியிருப்பார்கள்.
அப்போதும், பிஎஸ்என்எல் செகண்டரியாகவே வைக்கப்பட வாய்ப்புள்ளது அல்லது மேலும் பின்னடைவை சந்திக்கலாம். இருப்பினும், மத்திய அரசு வரும் காலங்களில் மற்ற நிறுவனங்களுக்கு இணையாகவும், துரிதமாகவும் சேவையை வழங்கினால், பிஎஸ்என்எல் நிறுவனம் விட்ட இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. இதுவும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கையில்தான் உள்ளது.
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications