வந்தது புது பிரச்சனை.. FASTag வாங்கி எத்தனை வருஷம் ஆச்சு? எப்போது மாற்ற வேண்டும்? NHAI சொல்வது என்ன?
புது கேஸ் சிலிண்டர் விதிகளை பின்பற்றவும், புது ஆதார் ஆப்பிற்கு மாறுங்கள், 2026-க்கான ஐடிஆர் ஃபைலிங் மாற்றங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என.. ஏற்கனவே பல வகையான புதுமை புயல்களில் சிக்கி சமாளித்து கொண்டிருக்கும் இந்திய மக்களுக்கு பாஸ்டேக் தொடர்பான ஒரு அலெர்ட்டும் வந்துள்ளது. இது நீங்கள் ஃபாஸ்டேக் வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது? நீங்கள் அதை எப்போது மாற்ற வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? என்பதை பற்றியது!
ஆக்டிவ் ஆக உள்ள ஃபாஸ்டேக் இருந்தும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி தாமதங்களை சந்தித்தால், அதற்கு காரணம் சுங்கச்சாவடி அமைப்பாக இல்லாமல், உங்கள் ஃபாஸ்டேக் ஆகவே இருக்கலாம் என்று என்எச்ஏஐ கூறுகிறது. அதாவது சேதமடைந்த ஃபாஸ்டேக் அல்லது தேய்மானம் அடைந்த ஃபாஸ்டேக்-கள் ஸ்கேன் செய்வதில் சிக்கல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் உருவாவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

என்எச்ஏஐ-இன் கூற்றுப்படி, சூரிய ஒளியில் தொடர்ந்து இருப்பதால் காலப்போக்கில் ஃபாஸ்டேக் சேதமடையக்கூடும். இது சுங்கச்சாவடிகளில் உள்ள ஸ்கேனர்களுடன் அந்த டேக் (tag) தொடர்பு கொள்ளும் திறனைபாதிக்கலாம். உங்களிடம் இருக்கும் ஃபாஸ்டேக் ஆனது சரியாக செயல்படாமல் போவதற்கு மூன்று முக்கிய காரணங்களை என்எச்ஏஐ சுட்டிக்காட்டுகிறது:
1. அடிக்கடி விண்ட்ஷீல்டை சுத்தம் செய்தல்: அதிகப்படியாக தேய்ப்பது அல்லது வீரியம் மிக்க சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்துவது, டேக்கிற்குள் உள்ள ஆர்எப்ஐடி (RFID) சிப்பை சேதப்படுத்தலாம்.
2. வெப்பம், தூசி மற்றும் மழையின் தாக்கம்: கடுமையான வானிலை நிலைகளில் நீண்ட நேரம் இருப்பதால், ஒட்டும் தன்மை மற்றும் உட்புற பாகங்கள் பலவீனமடையலாம்.
3. பழைய அல்லது தேய்மானம் அடைந்த ஃபாஸ்டேக்-கள்: பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு, காலப்போக்கில் டேக்கின் செயல் திறன் குறையலாம்.
உங்கள் ஃபாஸ்டேக்-ஐ எப்போது மாற்ற வேண்டும்? பின்வரும் சூழல்களில் வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்டேக்-ஐ மாற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்:
1. ஃபாஸ்டேக் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்தால்.
2. ஸ்கேன் செய்வதில் தோல்வி அல்லது சுங்கச்சாவடி தாமதங்களை அடிக்கடி சந்தித்தால்.
இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பேலன்ஸ் இருந்தாலும், பழுதடைந்த ஃபாஸ்டேக் தடையற்ற பயணத்தை பாதிக்கலாம் மற்றும் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற நிறுத்தங்களை ஏற்படுத்தலாம்.
வாகன உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? மாற்று ஃபாஸ்டேக்-ஐ பெற, அதை வழங்கிய வங்கியை (Issuer bank) தொடர்பு கொள்ளுமாறு என்எச்ஏஐ (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) பரிந்துரைக்கிறது. சேதமடைந்த ஃபாஸ்டேக்-ஐ மாற்றுவது சுங்கச்சாவடியை விரைவாக கடக்க உதவுவதோடு, அங்குள்ள நெரிசலையும் குறைக்க உதவுகிறது.
நெடுஞ்சாலைகளில் தடையில்லா சுங்க வசூல் (barrier-less tolling) மற்றும் எம்எல்எப்எப் (MLFF) அமைப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், நன்கு செயல்படும் ஃபாஸ்டேக்-ஐ வைத்திருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமாகி வருகிறது. உங்கள் ஃபாஸ்டேக் சரியாக ஸ்கேன் ஆகவில்லை என்றால், அதை முன்கூட்டியே மாற்றுவது நேரத்தை மிச்சப்படுத்தவும், சிரமத்தை தவிர்க்கவும், நெடுஞ்சாலைப் பயணத்தை சுமூகமாக்கவும் உதவும்.
தடையற்ற சுங்க வசூல் என்றால் என்ன? பிஸிக்கல் தடைகளை கொண்ட வழக்கமான சுங்கச்சாவடிகளை போலல்லாமல், இந்த அமைப்பானது சென்சார்கள் மற்றும் கேமராக்கள் (sensors and cameras) பொருத்தப்பட்ட மேல்நிலை சட்டகங்களை (overhead frames) பயன்படுத்தி, வாகனங்களை தானாகவே அடையாளம் கண்டு, நிகழ்நேரத்தில் சுங்க கட்டணங்களை கழிக்கிறது.
அதாவது மல்டி-லேன் ப்ரீ ப்ளோ (Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தடையற்ற சுங்க கட்டண முறையானது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்பதை முற்றிலுமாக தவிர்க்க உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் சக்தி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2026-ல் இந்த அறிமுகம் அறிவிக்கப்பட்டது. அங்கு, இந்தியாவின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், தளவாட செலவுகளை குறைப்பதிலும் இதன் பங்கை, அமைச்சர் கட்கரி எடுத்துரைத்தார்.


Click it and Unblock the Notifications