இழுத்து மூடப்பட உள்ளதா Vodafone Idea? மிக அவசரமாக தேவைப்படும் அரசாங்க உதவி.. ஏற்கனவே 50% எடுத்தாச்சு!
இந்தியாவில் இருப்பதே 3 பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தான். போகிற போக்கை பார்த்தால், அதிலொன்று காணாமல் போய்விடும் போல, ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல்லுக்கு (Airtel) அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது மிகவும் அவசரமாக அரசாங்க உதவியை எதிர்பார்க்கிறது.
ஏனென்றால் - வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் தோள்களில் அரசாங்கம் ஒரு பெரிய கடனை சுமத்தியுள்ளது. இங்கே நாம் "கடன்" என்று பேசுவது - ஏஜிஆர் (AGR) என்கிற சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகை (Adjusted gross revenue dues) ஆகும்.

இந்நிறுவனத்தின் ஏஜிஆர் நிலுவை தொகை ஆனது அது வசதியாக செலுத்தக்கூடியதை விட அதிகமாக உள்ளது, வங்கிகள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து அதிக கடன்கள் வரவிருக்கின்றன. எனவே இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அரசாங்க உதவியை நாடியிருந்தது; மேலும் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசும் ஏராளமான ஆதரவை வழங்கியும் உள்ளது.
அரசாங்கம் செய்த முக்கிய விஷயங்களில் ஒன்று - நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைகளுக்கு எதிராக நிறுவனத்தில் பங்குகளை (Equity in the company) எடுத்துக்கொள்வது. இது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிலுவைத் தொகையைக் குறைத்தது மட்டுமல்லாமல், அதற்கு சிறிது ஓய்வும் அளித்தது.
வோடபோன் ஐடியாவில் தற்போது இந்திய அரசாங்கத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் 50% க்கு மிக அருகில் உள்ளது. வோடபோன் ஐடியாவை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனமாக (Government run company) மாற்ற இந்திய அரசாங்கத்திடம் எந்த நோக்கமும் இல்லை. எனவே, அது இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலும் எந்த பங்குகளையும் எடுக்காது. மேலும் இந்திய அரசாங்கமானது இந்நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் விரும்பவில்லை.
இங்கு தான் சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு தொடங்கி, வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது ஒத்திவைக்கப்பட்ட ஏஜிஆர் நிலுவைத் தொகையை (Deferred AGR dues) தவணைகளில் செலுத்த வேண்டியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த தவணைகள் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் செலுத்தக்கூடியதை விட அதிகம்.
வோடபோன் ஐடியா திரட்டிய நிதி ஆனது மூலதன செலவை அதிகரிப்பதற்காக செய்யப்படும் செலவிற்கே (boosting capex) சரியாக உள்ளது. அதாவது நிதியைத் திரட்டி, பின்னர் அதை மீண்டும் நெட்வொர்க்குகளில் முதலீடு செய்தல் - இப்படி தான் வோடபோன் ஐடியா நிறுவனம் வண்டி ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
மேலும் இந்நிறுவனம் சம்பாதிக்கும் வருவாயை பொறுத்தவரை, அது நிறுவனத்தின் செலவுகளை கவனித்து கொள்வதற்கும் நிலுவை தொகையை தீர்ப்பதற்குமே சரியாக உள்ளது. அதாவது ஏஜிஆர் தவணைகளை வசதியாக செலுத்தவும், கூடவே செயல்பாட்டு செலவுகளையும் கவனித்துக்கொள்ளும் அளவில் இந்நிறுவனத்திற்கு வருவாய் இல்லை.
இவை அனைத்திற்கும் மேலாக, அரசாங்கம் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து கூடுதல் ஏஜிஆர் நிலுவை தொகையை (Additional AGR dues ) கோரியுள்ளது, இந்த முடிவிற்கு எதிராக வோடபோன் ஐடியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court) நாடி உள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இன்னும் எந்த முடிவையும் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லும் முடிவை வைத்தே - வோடாபோன் ஐடியாவின் அஸ்திவாரம் பலப்படுத்தப்படுமா அல்லது ஆட்டிப்பார்க்கப்படுமா என்பது தெரியவரும்!


Click it and Unblock the Notifications








