ஆப்பிள் போன் பயன்படுத்தினால் தூக்கு தண்டனையா? எந்த நாட்டில் இப்படி ஒரு கொடூரமான சட்டம்?
மக்களுக்கு பல வினோதமான தடைகளை விதிப்பதில் பெயர் பெற்ற நாடு என்றால், அது 'வட கொரியா (North Korea)' தான் என்று எல்லோருமே பதில் கூறுவார்கள். வடகொரியாவில் உங்களால் சொந்தமாக தலை முடியைக் கூட, பிடித்த வடிவத்தில் சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை.
வட கொரியாவில் ஆண் / பெண் இருவருக்கும் சிகை அலங்காரம் செய்துகொள்ள மொத்தமாகவே வெறும் 18 விதமான கட்டிங் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதை மீறினால் மரண தண்டனையே விதிக்கப்படுகிறது. இப்படி, வட கொரியாவிற்குள் பல வினோதமான மற்றும் பல மோசமான விதிகள் பின்பற்றப்படுகிறது. இப்படி, வட கொரியாவில் பின்பற்றப்படும் மோசமான விதிப்படி இந்த நாட்டில் ஆப்பிள் (Apple) தயாரிப்புகள் மற்றும் கூகிள் (Google) தயாரிப்புகளை பயன்படுத்த அனுமதி கிடையாது.

இன்டர்நெட் பயன்படுத்த கூட இந்நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?
உலக நடப்புகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள தற்போது இருக்கும் ஒரு வசதி என்றால், அது இன்டர்நெட் (Internet) தான். ஸ்மார்ட்போன்களின் வரவிற்கு பின்னர், அந்த இன்டர்நெட் அனைவரின் கைக்குள்ளும் வந்துவிட்டது என்றே சொல்லலாம். ஸ்மார்ட் போன்கள் மற்றும் இன்டர்நெட் வசதி மூலம் நொடி பொழுதில் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும்.
சட்டரீதியாக ஏதேனும் ஒரு பிரச்சனை எழுந்தாலும், அது நியாயமான குற்றச்சாட்டு தானா? அதற்கான தீர்வு என்ன? என்பதையும் இன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இது அரசுக்கு எதிராக திரும்பும் என்ற காரணத்தால், வட கொரியா அரசு - அதன் குடிமக்களை இன்டர்நெட்டிடம் இருந்து வெகு தூரம் தள்ளி வைத்திருக்கிறது.
வடகொரியா மக்கள் மற்ற உலக நாடுகளில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதை அந்நாட்டு அரசு வன்மையாகக் கண்டித்து வருகிறது. தேவைப்பட்டால், இந்த செயல்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை கூட வழங்கப்படலாம் என்று கண்டிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு தெரியாமல் மக்கள் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காகத் தான் இத்தகைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Google வெப் பிரௌசர்லாம் இங்கே கிடையாது.! மக்கள் எதை பார்க்க வேண்டும் என்பதையும் அரசாங்கமே முடிவு செய்கிறதா?
அப்படியென்றால், வட கொரியாவில் இணைய வசதியே இல்லையா? என்றால், வடகொரியாவை சேர்ந்த மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், உலக மக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வசதி அல்ல. வடகொரியா அரசு உருவாக்கிய, தங்கள் நாட்டிற்குள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும், அவர்களது சொந்த இன்ட்ராநெட் (Intranet) வசதியை அந்நாட்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதில், அந்நாட்டு மக்கள் என்ன பார்க்கலாம் என்பதையும் அந்த அரசு தான் முடிவு செய்யும். அரசு அனுமதி அளித்துள்ள தகவலை மட்டும் தான் அவர்களால் இன்ட்ராநெட்டில் பார்க்க முடியுமாம். குவாங்மியோங்க் (Kwangmyong) என்று அழைக்கப்படும் வடகொரியாவின் பிரத்தியேக இன்ட்ராநெட் வசதி அந்நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. ஆனால், ஒரு அரசும் அதன் கீழ் பணியாற்றுபவரும் மற்ற நாடுகளின் நடப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அதுவும் வட கொரியா மாதிரியான நாட்டுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். எனவே, அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்ற உலக நாடுகளின் நடப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, நம்மைப் போல தடையில்லாத பொதுவான இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இன்டர்நெட்டிற்கே இவ்வளவு தடை என்றால், கையில் இருக்கும் போனிற்கு எவ்வளவு தடை இருக்கும்?

Apple iPhone மற்றும் Google ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த நாட்டில் தடையா? மீறினால் என்னவாகும்?
வடகொரியாவில் வசிக்கும் மக்கள், அங்கு உருவாக்கப்பட்ட போன்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும். கடந்த 2002 ஆம் ஆண்டு தான், முதன் முதலில் வடகொரிய மக்கள் மொபைல் போன்களை பயன்படுத்தத் துவங்கினர் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே அது தான் நிஜம். மற்ற உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வடகொரியா மக்களுக்கு அனுமதி இல்லை.
இதற்குக் காரணம், வடகொரியாவில் வசிக்கும் மக்கள் என்ன உரையாடுகிறார்கள் என்பது அரசுக்குத் தெரிய வேண்டும் என்பது தான். ஆமாம், எல்லாவற்றையும் அந்நாடு தொடர்ந்து கண்காணிக்கிறது. இந்த நாட்டில் பொதுமக்கள் ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் மேக் புக், கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று எதையுமே பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். இங்கு ஆப்பிள் மற்றும் கூகுள் தயாரிப்புகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த விதியை மீறினால், 3 தலைமுறைக்குக் கூட தண்டனை வழங்கப்படுமாம் அல்லது வழக்கம் போல உயிர்கள் பறிக்கப்படுமாம். இப்படி இருக்கும் போது, வடகொரியாவின் சில குடிமக்கள் மட்டும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபோன்களையும் மற்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் சாதாரண பொதுமக்கள் இல்லை என்பதே கவனிக்கத்தக்கது.

இந்த சட்டங்களையும் மீறி ஆப்பிள் சாதனங்களை பயமின்றி பயன்படுத்தும் குடிமக்கள் யார் தெரியுமா?
வடகொரியாவின் ஐபோன் அல்லது மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றால், அவர்கள் உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருக்கும் குடிமக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது. அதாவது, அரசுக்கு நெருக்கமான உயர் அதிகாரப்பொறுப்பில் இருப்பவர்களில் சிலருக்கு மட்டும் இந்த விதி கிடையாதாம். அதிகாரம் இருந்தால் ஆப்பிள் பிராடக்ட்களை யூஸ் செய்துகொள்ளலாம்.
சாமானியர்கள், ஆப்பிள் அல்லது மற்ற சாதனங்களைப் பயன்படுத்தினால் அது சட்டவிரோதமான செயல் என்றும், தேச குற்றமாக கருதப்படுகிறது. வடகொரியாவின் ரகசியங்கள், மற்ற உலக நாடுகளுக்கு தெரியாமல் பாதுகாப்பதற்காக இத்தகைய தடைகளை இந்நாடு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நமது நாட்டிலும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கமெண்டில் கருத்தைப் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications