மத்திய அரசு வைத்த செக்.. பம்பிய WhatsApp நிறுவனம்.. என்ன நடந்தது?
இந்திய வாட்ஸ்அப் (WhatsApp) யூசர்களுக்கு இன்டர்நேஷனல் நம்பர்களில் (International Numbers) இருந்து வரும் மோசடி கால்கள் குறித்த விவகாரத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு காரணமாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?
கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் சைபர் கிரைம் (Cyber Crime) கும்பல்கள், வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்களின் வங்கி தகவல்கள் (Bank Details), அவர்களின் தனிப்பட்ட ஆடியோக்கள் (Audios), வீடியோக்கள் (Videos) மற்றும் போட்டோக்களை (Photos) அபகரித்து, அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது.

அதாவது, சைபர் கிரைம் மோசடி கும்பல், வாட்ஸ்அப் யூசர்களுக்கு, இன்டர்நேஷனல் நம்பர்களில் இருந்து கால் (Call) செய்தும், மெசேஜ் (Messages) அனுப்பியும், பார்ட் டைம் ஜாப் (Part Time Jobs) ஆஃபர் இருக்கிறது என்று முதலில் கூறுகிறது. இதை நம்பி வாஸ்ட்அப் யூசர்கள், "என்ன வேலையென்று கேட்டால்", யூடியூப் வீடியோவுக்கு லைக் போடவும், சப்ஸ்கிரைப் செய்யவும் ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுகிறது.
இதையடுத்து வாட்ஸ்அப் யூசர்கள், வேலை செய்த பணத்தை கேட்கும்போது, அவர்களது பெயர், முகவரி, வங்கி தகவல்கள் உள்பட அனைத்தையும் கேட்டு பெற்றுக் கொள்கிறது. அதைவைத்து பண மோசடியில் ஈடுபடுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பல வாட்ஸ்அப் யூசர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அண்மையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்திருந்தார். அப்போது, இந்திய மக்களிடம் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்படும் பணமோசடி விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் புதிய டிஜிட்டல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மசோதா தயாராகி வருகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு தடை விதிக்கலாம் என்று சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் புரளியை கிளப்பிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் யூசர்களின் தனியுரிமை கொள்கையே எங்களுக்கு முதன்மையானது. இந்திய அரசின் கொள்கைகளுக்கு உட்பட்டு அந்த நாட்டில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இப்போது எழுந்துள்ள இன்டர்நேஷனல் நம்பர் மோசடி விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் ஸ்பேம் கால்கள் மற்றும் மேசேஜ்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஸ்பேம் ஃபில்டரிங் சிஸ்டம் செயல்பாட்டினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஸ்பேம் தொடர்பான புகார்களை அளிக்க யூசர்களுக்கு எளிதான நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வட மாநிலத்தை சேர்ந்த பலருக்கு எத்தியோப்பியா (+251), வியட்நாம் (+84), இந்தோனேசியா (+62), மலேசியா (+60), கென்யா (+254), பெரு (+51) உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வாட்ஸ்அப் நம்பர்களில் இருந்து கால் மற்றும் மெசேஜ் வந்துள்ளது. இந்த நம்பர்களில் இருந்து கால்கள் வந்தால் வாட்ஸ்அப் யூசர்கள் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








