வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை: மத்திய அரசு நோட்டீஸ்.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, புதிய தனியுரிமை கொள்கையை திரும்பப்பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக ஒருவாரத்துக்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது.

தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று
வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையை மாற்றம் செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது. எனவே இந்த புதிய கொள்கைகளை மே 15-ம் தேதிக்குள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வாட்ஸ்அப்புதியகொள்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்பு இதை தொடர்ந்து புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்தது.

வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், தனியுரிமை தொடர்பான கொள்கைகளை ஏற்பதற்கு மே 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்திற்கு பிறகும் புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படாது என்று கூறியுள்ளார். குறிப்பாக தனியுரிமை தொடர்பான கொள்கைகளை ஏற்கவில்லை என்றாலும் கூட வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும், பின்பு அதிக பயனாளர்கள் புதிய கொள்கைகளை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர சில பயனாளர்களே இந்த கொள்கைகளை ஏற்கவில்லை அவர்களுக்கு தனியுரிமை தொடர்பான புதிய கொள்கை நினைவூட்டல் விரைவில் அனுப்பப்படும் என்று கூறியுள்ளார் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர்.

ஒருவேளை நினைவூட்டல்களுக்குப் பின்னும் பயனாளர் புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால், ஒரு கட்டத்தில் அவரால் சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது. அதேபோல் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். ஏதேனும் அறிவிப்புகள் வந்தால் உடனே திறந்து படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவைகள் குறைக்கப்பட் சில வாரங்கள் கழித்தும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்காவிட்டால் வெளியில் இருந்து வரும் அழைப்புகளும் நிறுத்தப்படும். ஆனால் புதியகொள்கையை ஏற்காத பயனாளிகளின் கணக்குகள் நீக்கப்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சம், புதிய தனி உரிமை கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பயனாளர்களுக்கும், இந்திய பயனாளர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் இருவேறு கொள்கைகளை பின்பற்றுவதாகவும் இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அதபோல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த தனியுரிமை கொள்கை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு விரோதமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








