வாட்ஸ்அப்பில் இருந்து ZOHO Arattai செயலிக்கு மெசேஜ் அனுப்பும் வசதி.. ஸ்ரீதர் வேம்பு கூறியது நடக்கப்போகுது..
வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்கு போட்டியாக ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி (ZOHO Arattai App) வெளியானது. கடந்த மாதம் மட்டும் இந்த அரட்டை செயலியை அதிக இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இந்த மாதம் இந்தியாவின் டாப் 100 ஆப்களின் (India's top 100 apps) பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே முதல் இடத்தைப் பிடித்து அசத்திய இந்த அரட்டை செயலி, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தற்போது முதல் 100 செயலிகள் பட்டியலை விட்டு வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே சரிவைச் சந்தித்துள்ளது. விரைவில் இந்த செயலி சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய (Cross-compatibility) தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Zoho founder Sridhar Vembu) கூறிய நிலையில், தற்போது அதன் முக்கியப் போட்டியாளரான வாட்ஸ்அப் அதே அம்சத்தை சோதித்து வருவது தெரிய வந்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சம்
அதாவது WaBetaInfo-வின் தகவலின்படி, வாட்ஸ்அப் தற்போது பயனர்கள் பிற மெசேஜிங் தளங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பக்கூடிய ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தற்போது ஐரோப்பாவில் உள்ள பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.
இந்த புதிய அம்சம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால் வாட்ஸ்அப்-ல் இருந்தபடியே அரட்டை செயலியைப் பயன்படுத்தும் ஒருவருடன் உரையாடலை தொடங்கவும், தொடர்ந்து பேசவும் அனுமதிக்கும்.
கடந்த செப்டம்பர் மாதம் தான் ஸ்ரீதர் வேம்பு, மெசேஜிங் செயலிகளுக்கிடையேயான தகவல்தொடர்பு நெறிமுறைகளை யுபிஐ போல ஒருங்கிணைப்பதற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். அதாவது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலியை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப முடியும். இதேபோன்று மெசேஜிங் செயலிகளையும் ஒருகிணைப்பதன் மூலம் தகவல்கள் எளிமையாக பகிரமுடியும்.
குறிப்பாக வாட்ஸ்அப்பைப் போல மூடப்பட்ட அமைப்புகளாக இல்லாமல், யுபிஐ மற்றும் மின்னஞ்சல் போலச் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருந்தார்.
புதிய அம்சம் இந்தியாவுக்கு வருமா?
தற்போது இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதிப்பதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைச் சட்டம் (Digital Markets Act - DMA) தான். இந்த சட்டம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்குடன், வாட்ஸ்அப் போன்ற பெரிய மெசேஜிங் தளங்கள் மற்றும் சேவைகளுக்கு திறந்த தகவல் தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதனால் தான் தற்போது வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

ஆனாலும் இந்த புதிய அம்சம் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்திய மற்றும் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்தியாவிலும் வாட்ஸ்அப் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








