வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தி உலக அளவில் சுமார் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ் அப் தகவல் அடையாளம் தெரியாத நபர்களால் வேவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது.

பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர்
பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் பயன்படுத்தி உலக அளவில் சுமார் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ் அப் தகவல் அடையாளம் தெரியாத நபர்களால் வேவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது. இதில் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கல் என 121 பேர் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பதில்
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மாநிலங்களவையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய தகவல் மற்று்ம தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார். அதில்,

வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம்
கடந்த ஜூலை, செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்கேத்கார்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். வேவு பார்க்கப்பட்ட மென்பொருள் தொடர்பாக அந்த நிறுவனம் பதில் அளிக்கவில்லை எனவும் இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அவசரகால அடிப்படையில் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரியது. அதோடு வாட்ஸ் அப் அம்சங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

மென்பொருள் குறித்து விளக்கம்
இதற்கு நவம்பர் மாதம் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைத்தது என்று தெரிவித்தார். ஆனால் அதில் அரசுக்கு திருப்தி கிடைக்கவில்லை எனவும் ஹேக் செய்யப்பட்ட இந்தியர்களின் விவரங்கள் மற்றும் ஹேக்கிங் மென்பொருள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது என கூறினார்.

பெகாசஸ் உளவு மென்பொருள்
இந்த நிலையில், இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் இந்தியா்களின் விவரங்கள் வேவுபார்க்கபட்டதாக தகவல்கள் வலம் வந்தது. இதையடுத்து பெகாசஸ் மென்பொருள் மற்றும் அதன் விவரங்களைக் கேட்டு, என்எஸ்ஓ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை
இணைய தளங்களில் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தகவல் திருட்டு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிநபர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது அதை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.

மசோதா தாக்கல் செய்ய முடிவு
மின்னணு நிறுவனங்கள் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்யவேண்டும். தகவல் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications