இனி எல்லாமே மாறும்.. UPU உடன் இணைக்கப்பட்ட UPI சேவை.. உள்ளே வந்த இந்திய அஞ்சல் துறை!
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) ஆனது யுபியு (UPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் (Universal Postal Union) இன்டர்கனெக்ஷன் பிளாட்பாரம் உடன் இணைக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் யுபிஐ வழியிலாக, சர்வதேச அளவிலான பணப்பரிமாற்றம் இன்னும் விரைவாக, இன்னும் மலிவானதாக மற்றும் இன்னும் பாதுகாப்பானதாக செயல்பட உள்ளது. துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய அஞ்சல் மாநாட்டில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா, யுபிஐ-யுபியு (UPI-UPU) ஒருங்கிணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

யுபிஐ-யுபியு ஒருங்கிணைப்பு திட்டம் (UPI-UPU Integration Project) என்பது இந்தியாவின் அஞ்சல் துறை (India's Department of Posts), என்பிசிஐ சர்வதேச கொடுப்பனவுகள் லிமிடெட் (NPCI International Payments Ltd - NIPL) மற்றும் யுபியு (UPU) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.
இது இந்தியாவின் நிகழ்நேர கட்டண முறையான யுபிஐ சேவையை யுபியு-யின் கீழ் உலகளாவிய அஞ்சல் கட்டண வலையமைப்புடன் இணைக்கிறது. இந்த முயற்சி பணம் அனுப்பும் செலவுகள் மற்றும் செயலாக்க நேரங்களை குறைக்க முயல்கிறது, இதனால் எல்லை தாண்டிய பண பரிமாற்றங்களை சார்ந்திருக்கும் மில்லியன் கணக்கான குடும்ப உறுப்பினர்கள் பயன் அடைவார்கள்.
இந்த திட்டம் இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது. யுபிஐ என்பது உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தியாவின் உடனடி கட்டண இடைமுகமாகும். யுபியு-ஐபி (UPU-IP) என்பது 192 உறுப்பு நாடுகளின் அஞ்சல் சேவைகளை இணைக்கும் ஒரு தளமாகும். இவற்றை இணைப்பதன் மூலம், இந்த திட்டம் சர்வதேச கட்டணங்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த தடையற்ற சேனலை வழங்கும்.
மேலும் இந்த ஒருங்கிணைப்பு, அதிக கட்டணங்கள், மெதுவான பரிமாற்றங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட அணுகல் போன்ற சர்வதேச பணம் அனுப்புதலில் உள்ள முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும். பாரம்பரிய வங்கிகளுக்கு மாற்றாக வரும் இந்த திட்டம் இந்தியாவின் விரிவான அஞ்சல் வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை பயன்படுத்தி உலகளாவிய பணம் அனுப்பும் செலவுகளை குறைக்கும்.
இதனொரு பகுதியாக, டிஜிட்டல் வழியிலான பணம் செலுத்துதல், இ-காமர்ஸ் மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, உலகளாவிய அஞ்சல் சேவைகளை வலுப்படுத்த இந்தியா 10 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். உலகளவில் சமமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக பிராந்திய அளவிலான வொர்க்ஷாப்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
யுபிஐ சேவையில் இந்தியாவின் வெற்றியானது - ஆதார், ஜன் தன் யோஜனா மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உள்ளிட்ட வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. 560 மில்லியனுக்கும் அதிகமான அக்கவுண்ட் திறக்கப்பட்டுள்ளன. இந்திய போஸ்ட் கடந்த ஆண்டு 900 மில்லியனுக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்துள்ளது. இது அதன் நெட்வொர்க்கின் அளவை காட்டுகிறது. இதுவே யுபிஐ-யுபியு திட்டத்தின் அடித்தளமாக அமைகிறது.
2024-25 ஆம் ஆண்டில் $2.83 டிரில்லியன் மதிப்புள்ள 185 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ஆனது யுபிஐ சேவையின் கீழ் செயல்படுத்தபட்டுள்ளது. இது உலகின் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் கிட்டத்தட்ட பாதி ஆகும். யுபிஐ- யுபியு இணைப்பு ஆனது சர்வதேச பணம் அனுப்புதலை ஒரு மெசேஜ் அனுப்புவது போல எளிதாக்கும். இது இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற சமூகங்களுக்கு உடனடியான, குறைந்த விலையிலான பணப்பரிமாற்றங்களை செயல்படுத்தும். மேலும் அஞ்சல் நிர்வாகங்கள் புதிய வருவாயை பெறும் மற்றும் அதன் சேவைகளை இன்னும் வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications