இளமைப் பருவத்தில் இப்படியொரு சோதனையா? வரிசையில் தான் நிக்கனும்.. மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை..
தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆகிய இரண்டிற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை (Sundar Pichai). குறிப்பாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து, கடின உழைப்பாலும் தொடர் முயற்சியாலும் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் தனது குழந்தைப் பருவம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் குறித்து சுந்தர் பிச்சை பேசிய விஷயங்கள் வைரலாகி உள்ளது. அதாவது லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டில் (Lex Fridman Podcast) பேசிய சுந்தர் பிச்சை, குடிநீர் மற்றும் தொலைபேசி போன்ற இன்றைய அடிப்படை வசதிகள் ஆடம்பரமாக இருந்த காலத்தில் சென்னையில் வளர்ந்ததை நினைவு கூர்ந்தார்.

அதுவும் ஐந்து வருட காத்திருப்புக்கு பிறகு ரோட்டரி தொலைபேசி கிடைத்தது எனவும், அது எங்கள் வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றியது எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். அதேபோல் வீட்டின் அருகில் உள்ள மக்கள் இந்த தொலைபேசியை பயன்படுத்தி அன்புக்குரியவர்களை அழைக்க எங்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று சுந்தர் பிச்சை நினைவு கூர்ந்தார்.
இரத்த பரிசோதனை பதிவுகளைப் பெற நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது, அதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். அங்கு சென்றால் மன்னிக்கவும், அது தயாராக இல்லை நாளை திரும்பி வாருங்கள் என்று சொல்வார்கள். மறுபடியும் திரும்ப வர இரண்டு மணிநேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. அதாவது தொழில்நுட்ப வளர்ச்சியால் சில நிமிடங்களில் பரிசோதனை அறிக்கைகளைப் பெறமுடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார்.
இதுதவிர அடிப்படைத் தேவைகள் கூட அன்றாட சவாலாக இருந்தது. அதாவது வறட்சியின் போது எங்களுக்குக் குழாய் தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமம். அதனால் நாங்கள் லாரிகளில் தண்ணீரைப் பெறமுடிந்தது. ஒரு வீட்டிற்கு எட்டு வாளிகள் கிடைக்கும். நானும் என் சகோதரனும் சில சமயங்களில் என் அம்மாவும், வரிசையில் காத்திருந்து அதைப் பெறுவோம் என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான புதுமையின் திறனில் தனது நம்பிக்கையைத் தூண்டுவதற்கு இதுபோன்ற தருணங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன என அவர் கூறினார். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புத்திசாலித்தனமான தேர்வுகளை எடுங்கள், அதேசமயம் உங்கள் இதயம் சொல்வதையும் கேளுங்கள் என்று சுந்தர் பிச்சை அறிவுறுத்தினார்.
அதேபோல் சென்னை பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, ஐஐடி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றார். மேலும் ஆரம்பத்தில் மெக்கின்சி போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 2004 இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு குரோம், குரோம் ஓஎஸ், கூகுள் டிரைவ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என கூகுளின் பல முக்கியத் தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இவரது திறமையைக் கண்டறிந்து 2015 ஆகஸ்டில் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் கூகுளை தோற்றுவித்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஆல்பாபெட் தலைவர் பொறுப்புகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கூகுள் மற்றும் ஆல்பாபெட் இரண்டிற்கும் தலைமை தாங்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications