மொட்டை மாடியில் மொபைல் டவர் கட்டுறீங்களா? அரசாங்கம் கடும் எச்சரிக்கை!
உங்கள் வீட்டின் மொட்டை மாடி கொஞ்சம் அகலமாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு சொந்தமாக ஒரு காலி மனை இருந்தாலோ, "பேசாம.. இங்க ஒரு செல்போன் டவர் கட்டிடலாம்ல.. நல்லா காசு பார்க்கலாம்!" என்று கூறுபவர்களை நிச்சயம் பார்க்க முடியும்.
"அட இது நல்ல ஐடியாவே இருக்கு!" என்கிற ஆர்வத்தில் மொபைல் டவர் கட்டுவது தொடர்பான முயற்சிகளில் நீங்கள் இறங்கி உள்ளீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு எச்சரிக்கை; எங்களிடம் இருந்து அல்ல.. நேரடியாக அரசாங்கத்திடம் இருந்து!

அதென்ன எச்சரிக்கை?
சில போலியான நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள், மொபைல் டவர்களை நிறுவ விரும்பும் பொது மக்களை குறி வைத்து ஏமாற்றி வருவதாகவும், அவர்கள் தங்களின் தனிப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டில் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் பேங்க் அக்கவுண்ட்டில் பணத்தை டெபாசிட் செய்யும்படி கேட்பதாகவும், அந்த பணம் மொபைல் டவர்களை நிறுவுவதற்காக அரசங்கத்திற்கு கொடுக்கும் வரி என்று கூறி மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

"நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவாங்க!" ஏமாந்து விடாதீர்கள்!
மேற்கூறிய புகார்களை டிப்படையாக கொண்டு, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (Cellular Operators Association of India - COAI) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் (Digital Infrastructure Providers' Association - DIPA) இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்குமாறு பொது மக்களை எச்சரித்துள்ளது.

போலியான 'நோ அப்ஜெக்ஷன்' சான்றிதழ்!
"அராசாங்க வரி" என்கிற பெயரில் மோசடி செய்யும் இந்த கும்பல், மொபைல் டவர்களை நிறுவுவதற்கு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து கிடைத்ததாக கூறப்படும் போலியான 'நோ அப்ஜெக்ஷன்' சான்றிதழ்களையும் (No Objection Certificates) வழங்கி உள்ளனர் என்பது தான் இந்த மோசடியின் - ஹைலைட்!

விசாரிக்காமல் வேலையில் இறங்கிடாதீங்க!
மொபைல் டவர் நிறுவலுக்கான எந்தவொரு சலுகைகளை ஏற்கும் முன், TSP-கள் (Telecom service providers) அல்லது IP-களின் (Infrastructure providers) இணையதளங்களுக்குச் சென்று "நம்பகத்தன்மையை" சரிபார்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (TSP) அல்லது உள்கட்டமைப்பு வழங்குநர்கள் (IPs) மூலமே மொபைல் டவர்கள் நிறுவப்படுகின்றன.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இண்டஸ் டவர்ஸ், அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன், சம்மிட் டிஜிட்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அசென்ட் டெலிகாம் மற்றும் டவர் விஷன் போன்ற டெலிகாம் உள்கட்டமைப்பு வழங்குநர்களால் தான் மொபைல் டவர்கள் நிறுவப்படுகின்றன.

க்ராஸ்-செக் செய்வது எப்படி?
டிஐபிஏ-யின் டிஜி ஆன டி.ஆர்.துவாவின் கூற்றுப்படி, "இதுபோன்ற மோசடிகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ரொவைடர்கள் (IPs) பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன: கட்டணமில்லா எண்கள், இணையதளங்கள், மின்னஞ்சல்கள் போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் மொபைல் டவர் தொடர்பான சாத்தியமான தகவல்களை சேகரிக்க பல்வேறு வழிகளை உருவாக்கி உள்ளன".

5ஜி-க்காக 15 லட்சம் டவர்கள் நிறுவப்பட உள்ளன!
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இதுவரை நாடு முழுவதும் 6.8 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இந்தியா 5G சேவைக்கு தயாராகி வருவதால் வருகிற 2024 ஆம் ஆண்டிற்குள் 15 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் நிறுவப்பட உள்ளன. இப்போது புரிகிறதா? எப்படி இந்த மொபைல் டவர் மோசடி கிளம்பியது என்று!?

மோசடி இருக்கட்டும். மொபைல் டவர்களால் உடல் நலம் பாதிக்கப்படுமா?
ஒரு மொபைல் டவரில் இருந்து 50 - 300 மீட்டர் தொலைவில் தான் கதிர்வீச்சின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் ஒரு மொபைல் டவரின் அருகிலேயே இருக்கும் போது அதன் கதிர்வீச்சின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று அர்த்தம்.
ஆக உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அல்லது நீங்கள் தங்கும் அபார்ட்மெண்டின் மேலே செல்போன் ஆண்டெனா / செல்போன் டவர் இருந்தால், உங்களுக்கு அது ஒரு நேரடி அச்சுறுத்தலாக இருக்காது.
மொபைல் டவரில் இருந்து மைக்ரோவேவ் பீம்கள் (Microwave beams) வெளிப்புறமாகவே செல்லுமாம், நீங்கள் மொபைல் டவரின் "நிழலில்" (கீழ் பகுதியில்) இருக்கும் வரை நீங்கள் "சேஃப்' தான்!

உடனே பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டாம்!
ஐஐடி பாம்பே-வின் மின் பொறியியல் துறை பேராசிரியர் ஆன கிரிஷ் குமார் ஒருமுறை, "உங்கள் வீடு அல்லது உங்கள் அலுவலகதத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு மொபைல் டவர் இருக்கிறது என்றால், நீங்கள் 24 மணிநேரமும் மைக்ரோவேவ் அவனில் இருப்பதற்கு சமம்" என்று கூறி உள்ளார். அதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications