Flipkart Quick: 90 நிமிடத்தில் குயிக் டெலிவரி வழங்கும் பிளிப்கார்ட்டின் புதிய திட்டம்!
பிளிப்கார்ட் நிறுவனம் புதிதாக பிளிப்கார்ட் குயிக் (Flipkart Quick) என்ற சேவையைத் துவங்கவுள்ளது என்று தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த புதிய சேவையின்படி நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் 90 நிமிடத்தில் உங்கள் இருப்பிடம் தேடி விநியோகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை எப்பொழுது துவங்குகிறது, இந்த சேவையின் கீழ் நீங்கள் எப்படி ஆர்டர் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய பிளிப்கார்ட் குயிக் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாடிக்கையாளர் இந்த புதிய சேவையின் மூலம் ஆர்டர் செய்துகொள்ளலாம். நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 90 நிமிடங்களில் அனைத்து பொருட்களும் உங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது என்பது பாதுகாப்பானதாக இருக்காது என்பதனால் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பிளிப்கார்ட் பயனர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாகச் சமையலுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ளது. அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் தற்பொழுது அதன் பாஸ்ட் டெலிவரி சேவையைத் துவங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல்கட்டமான சோதனை முயற்சியாகப் பெங்களூருவின் சில பகுதிகளில் அறிமுகமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் விரைவில் பிளிப்கார்ட் குயிக் சேவைஅறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே மளிகைப் பொருட்களைக் குறைந்த நேரத்தில் டெலிவரி செய்யும் சேவையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, 90 நிமிடத்தில் டெலிவரி செய்யும் Flipkart Quick சேவையை தற்பொழுது துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications