காத்திருந்தது போதும்., விரைவில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்: PM Modi அறிவிப்பு!
5G-க்கான காத்திருப்பு நேரம் முடிந்துவிட்டது என PM Modi சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய கிராமங்கள் ஆப்டிகல் ஃபைபருக்கான அணுகலைப் பெறும் என்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் இணையம் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ஜி சேவை விரைவில்
இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் தொடங்க டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜியோ மற்றும் ஏர்டெல் முதலில் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டார். இந்த உரையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து பேசினார்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் இணைய சேவை
"5G-க்காக காத்திருந்தது முடிந்துவிட்டது" என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதன்மூலம் இந்தியாவில் 5ஜி சேவை அதிவிரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு இந்தியாவின் கிராமங்கள் தோறும் ஆப்டிகல் ஃபைபர் அணுகல் கிடைக்கும் எனவும் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் இணைய சேவை சென்றடையும் எனவும் உரையில் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், கல்வியிலும் டிஜிட்டல் புரட்சி வரும் என தெரிவித்தார்.

விரைவில் 5ஜி சேவை தொடங்கும் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களும் விரைவில் 5ஜி சேவைகளை தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் கடந்த சில காலமாகவே 5ஜி சேவையை அறிமுகம் செய்ய முணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், மிக விரைவில் 5ஜி சேவைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என குறிப்பிட்டார்.

மும்முரமாக செயல்படும் நிறுவனங்கள்
அதன்படி ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஜியோ தனது 5G சேவைகளை விரைவில் அறிமுகம் செய்யும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல இடங்களில் 5ஜி நெட்வொர்க் சோதனையை நடத்தி வருகிறது.
அதேபோல் செப்டம்பர் 29 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவில் பிரதமர் மோடி 5G சேவையை அறிமுகப்படுத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க்
ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜியோ அதற்கான சோதனைகளையும் தொடங்கி நடத்தி வருகிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது. மெட்ரோ நிலையத்தில் 5ஜி சோதனை செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க் இதுதான்.

10 மடங்கு அதிக வேகம்
இந்த சோதனையில், ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது.
1.45Gbps என்றால் எவ்வளவு வேகம் என்று தெரியுமா?. பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

விலை என்னவாக இருக்கும்?
5ஜி விலை ஆனது 4ஜி-ஐ விட அதிகமாக இருக்கும் என்பது அறிந்ததே. இருப்பினும் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று வெளியான சில தகவல்களை வைத்து பார்க்கலாம். இது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications