முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை
அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

வரலாறு காணாத நஷ்டம்
வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு
இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனடியாக தொகையை செலுத்துங்கள்
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

பாரதி ஏர்டெல் பதில்
இந்நிலையில், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்திருந்தது.

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்
இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாக அறிவித்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாரதி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் கோரிக்கை
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வோடபோன் நிறுவனம் முதல்கட்டமாக ₹2,500 கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை அடுத்த ஐந்து நாட்களுக்குள் செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய விலை உயர்வு
ஏர்டெல் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போஸ்ட்பெயிட் இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தார் அல்லது நண்பரை தங்களது குறைந்த விலை திட்டத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். அதன்படி ஏர்டெல் ஆட் ஆன் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ.249-என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் உயர்வு
குறிப்பாக இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. அதாவது ரூ.499 மாத திட்டத்தை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே திட்டத்தில் இணைக்கும் போது இரண்டாவது இணைப்பிற்கு ரூ.249மட்டும் செலுத்தினால் போதும். இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடபோன் விலை ஏற்றம் வருமா
கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் வோடபோன் நிறுவனம் தற்போது கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதையடுத்து கடனை கட்டுவதற்கான ஒரு முயற்சி நடைபெற்று வந்தாலும் அதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு விலை ஏற்றம் அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

7 மடங்கு உயர்த்த கோரிக்கை.,
இதுதொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் டேட்டா கட்டண உயர்வை தவிர்க்கும்படி, அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் செய்ய விரும்புவதாகவும் அதில் கூறியுள்ளது.

தற்போது 1 ஜிபி விலை ரூ. 4 முதல் ரூ.5 ஆனால் உயர்த்தப்பட்டால்?
அந்நிறுவனத்தின் தற்போதைய மொபைல் டேட்டா கட்டணம் 1 ஜிபிக்கு ரூ 4 முதல் ரூ 5 வரை உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற நிறுவங்களுடன் இணைந்து வோடபோன் ஐடியா அதன் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்திய 3 மாதங்களுக்குள் தற்போது இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

ஜியோ விலை ஏற்றம் வருமா
வழக்கம் போல் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனத்தின் விலை சற்று குறைந்தே இருந்தாலும். எடுத்துக்காட்டாக 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ள பிற நிறுவனத்தின் கட்டணங்கள் 250 என உயர்த்தபடுமாயின் ஜியோ தனது திட்டத்தை 175 இல் இருந்து 200-க்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஜியோ அதிக வாடிக்கையாளர்கள் வைத்துள்ளதால் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications