2021-ல் காத்திருக்கும் அதிர்ச்சி: அதிகரிக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் விலை- வெளியான தகவல்!
உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தொழில்களை பெருக்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்வது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகும்.

வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்ட்
சமீபத்தில் வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ அறிமுகமான குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போடும் முயற்சியில் விஐ, ஏர்டெல் திக்குமுக்காடி வருகின்றன.

குறைந்த விலையில் அதிக இணைய சேவை
ஜியோ குறைந்த விலையில் அதிக இணைய சேவைகளுடன் கூடிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்காரணமாக ஜியோ குறைந்த காலத்திலேயே அதீத வளர்ச்சி அடைந்தது. அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் லாபத்தை மறந்து பல சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை
இந்தநிலையில் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்ற அழுத்தத்தினால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளன. இதையடுத்து அடுத்த விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு முதல் விலை உயர வாய்ப்பு
வருகிற புத்தாண்டு முதல் விஐ நிறுவனம் விலை உயர்வு செயல்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போதைய கட்டணமே உயர்வு என பட்ஜெட் விலை திட்டங்களை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருக்கலாம்.

15 முதல் 20 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்த எகனாமிக்ஸ் டைம்ஸின் அறிக்கை குறித்து பார்க்கலாம். 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விஐ(வோடபோன் ஐடியா) 15 முதல் 20 சதவீதம் வரை விலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டண உயர்வு நிச்சயம் என்றாலும் அது சரியான நேரமாக இருக்க வேண்டும் என்றும் கட்டண உயர்வு வெகு தொலைவில் இல்லை என்றும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் தரப்பு தகவல்
அதேபோல் ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, தற்போதைய கட்டணங்கள் நிலையானவை அல்ல பயனர்கள் கட்டண உயர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். ஏர்டெல் விலை உயர்வை அதிகரிக்கும் முதல் நிறுவனமாக இருக்காது எனவும் ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.100 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது ஏர்டெல் குறைந்தபட்ச விலை ரூ.45 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு விலை உயர்வு
ரிலையன்ஸ் ஜியோவும் கட்டண உயர்வை உன்னிப்பாக கவனித்து பிற இரு நிறுவனங்களின் செயல்முறைக்கு ஏற்ப செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இறுதியில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் கட்டண உயர்வை அறிவித்தது. அதேபோல் 2016-ல் அறிமுகமான ஜியோவும் முதன்முறையாக 2019 ஆம் ஆண்டுதான் விலை உயர்வை அறிவித்தது. அதேபோல் இந்தாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
file images
source: economictimes


Click it and Unblock the Notifications