இந்தியாவில் முதல் முறையாக 8000 சிம் கார்டுகள் முடக்கம்.. போலி அடையாள சான்று மூலம் மோசடி..
இந்தியாவில் முதல் முறையாக ஒரே நேரத்தில் சுமார் 8000 சிம் கார்டுகள் முடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முக்கிய துவக்கமாக இருந்தது ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் கார் வாங்குவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த வழக்கைத் தொடர்ந்து துவக்கப்பட்ட விசாரணையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போலி அடையாளச் சான்றுகள் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8,000 சிம் கார்டுகளை முடக்கிய நிறுவனம்
போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட சிம் கார்டுகளைத் தடுக்குமாறு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியப் பிரதேச சைபர் காவல்துறை உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து ஒரு முன்னணி நிறுவனம் கிட்டத்தட்ட 8,000 சிம் கார்டுகளை முடக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் விளம்பரம் மூலம் கார் வாங்குவதாகக் கூறி ஏமாற்றி ரூ.1.75 லட்சம் மோசடி செய்த நபரின் புகாரின் பேரில், சைபர் செல் குவாலியர் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

போலி சிம் கார்டுகளை வாங்க உதவிய 8 பேர்
அந்த விசாரணையில் "மோசடி செய்தவர்கள் பயன்படுத்திய எண் வேறு ஒருவரின் அடையாள ஆவணத்தின் அடிப்படையில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டது. பின்னர், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிம் கார்டு வழங்குவதில் எட்டு பேர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது," குவாலியர் சைபர் மண்டலம் காவல்துறை கண்காணிப்பாளர் சுதிர் அகர்வால் தெரிவித்தார். இந்த விஷயத்தில் விரிவான விசாரணைக்குப் பிறகு, இந்த சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்கள் வைத்திருந்த சிம் எண்ணிக்கை அதிகாரிகளையே பிரமிக்க வைத்தது.

அதிகாரிகளைத் திகைப்பில் ஆழ்த்திய போலி எண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
ஆம், கிட்டத்தட்ட மோசடி செய்பவர்கள் சுமார் 20,000-திற்கும் மேற்பட்ட வெவ்வேறு சிம் எண்களைப் பயன்படுத்தியதை சைபர் போலீசார் கண்டறிந்தனர். 20,000 எண்கள் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சிம்கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் வழங்கிய குற்றத்திற்காக, இந்த மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக ஒரு வருட காலத்திற்கும் மேலாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறு சரிபார்த்த பிறகு சிக்கிய 7,948 சிம் கார்டுகளின் மீது கடும் நடவடிக்கை
விசாரணைக்குப் பிறகு, இதேபோன்று போலி அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து வேறு ஏதேனும் சிம் கார்டுகள் அல்லது புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை மறுசரிபார்ப்பு பார்க்கும் படி உத்தரவிடப்பட்டது. அதன் பெயரில் நடத்தப்பட்ட மறுசரிபார்ப்பின் போது வோடபோன்-ஐடியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சைபர் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறிவிப்பின் பேரில் விரைவாகச் செயல்பட்ட Vodafone-Idea சமீபத்தில் பதிவுகளை மறு சரிபார்த்த பிறகு 7,948 சிம் கார்டுகளைத் தடுத்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அப்பாவி மக்களை மோசடியில் சிக்காமல் பாதுகாக்க 8000 சிம் கார்டுகள் முடக்கம்
"அநேகமாக நாட்டில் முதல்முறையாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தால், அப்பாவி மக்களை மோசடி செய்பவர்களால் ஏமாறாமல் காப்பாற்றுவதற்காக, பல எண்களை முடக்கியது இதுவே முதல்முறை" என்று அகர்வால் கூறியுள்ளார். மற்ற நிறுவனங்களும் அத்தகைய சிம் கார்டுகளைத் தடுப்பதற்காக தங்கள் பதிவுகளை மீண்டும் சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மற்ற நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் 8000 சிம் கார்டுகளை முடக்கியுள்ளது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications