சொன்னா கேக்குறீங்களா? Earbuds ஆசையால் செவிடான மாணவன்!
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயது மாணவனுக்கு தொடர்ந்து இயர்பட்ஸ் பயன்டுத்திய காரணத்தால், செவித்திறன் பறிபோனது. இப்போது, காது கேளாமையால் அவதிப்பட்டு வருகிறார். இவரது காதுகளில் ஏற்பட்ட பாக்டீரியா பரவல் காரணமாக செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு எப்படி செவித்திறன் பறிபோனது, பாக்டீரிய பரவலுக்கும் இயர்பட்ஸ்க்கும் என்ன தொடர்பு, இப்படி செவித்திறன் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் இயர்போன்கள் (Earphones), ஹெட்போன்கள் (Headphones), இயர்பட்ஸ் (Earbuds) பயன்பாடு என்பது மக்களிடையே பின்னிப் பிணைந்து விட்டது.

இதில் ஏதாவது ஒன்றை ஸ்மார்ட்போன் (Smartphone) வைத்திருக்கும் அனைவரும் கட்டாயமாக வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது கூட அவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இயர்பட்ஸ் மிகவும் சிறியதாகவும், வயர்லெஸாகவும் இருப்பதால், அதை பயன்படுத்தும் மக்களில் பலர் அவற்றை தங்களது காதுகளில் இருந்து கழட்டுவதே கிடையாது.
தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக காதுகளிலேயே வைத்திருக்கின்றனர். இதுபோன்ற பழக்கம் மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், மக்கள் கேட்பதாக தெரியவில்லை. இவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 18 வயது மாணவன், பெரும்பாலான இளைஞர்களை போல இசை மீது கொண்ட அதீத ஆர்வத்தால், ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கும் மேலாக இயர்பட்ஸ் மூலம் பாடல்கள் கேட்பது, வீடியோ பார்ப்பது உள்ளிட்டவையை செய்து வந்துள்ளார். பொதுவாக இளம்பருவத்தினர் அதிகபட்சமாக 75dB முதல் 80dB வரையில் மட்டுமே ஒலியை கேட்க வேண்டும்.
இதற்கு மேல் கேட்டால், செவித்திறனில் குறைபாடுகள் ஏற்படும். ஆனால், இந்த மாணவன் இயர்பட்ஸ் மூலம் 104 முதல் 112 dB வரை ஒலியை கேட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தனது நண்பர்களின் ஹெட்போன், இயர்போன்களையும் கடன் வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் நாளடைவில் அவரது காதுகளில் வலி ஏற்பட்டதுடன் செவித்திறனும் குறைந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த வாரம் முழுவதும் காது கேட்காமல் போனது, இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் பெற்றோர் டெல்லியில் உள்ள தானியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது காது சவ்வுகளில் பாக்டீரிய பரவல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது மெல்ல மெல்ல செவித்திறன் திரும்பி வருகிறது. இருப்பினும், முழுமையாக மீளுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. மீண்டும் இயர்பட்ஸ் பயன்பாட்டை தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இசைப் பிரியர்களாக இருந்தால், ஆடியோ, வீடியோக்களின் ஒலி அளவை குறைத்து கேட்க வேண்டும். அதேபோல தொடர்ந்து கேட்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
இயர்போன், ஹெட்போன், இயர்பட்ஸ்களை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








