அமெரிக்காவில் டிக்டாக் தடையா?- ஓரிரு நாளில் முடிவெடுக்க வாய்ப்பு!
அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிடத் தொடங்கினார். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கின.

59 சீன செயலிகளுக்கு தடை
இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் இது பிரதானமாக திகழ்ந்தது.

அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்கள்
இந்தியாவில் மட்டுமின்றி இந்த செயலி அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிக் டாக் உட்பட சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சீன ஆப்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சமீபத்தில் தெரிவித்தார்.

மைக் பாம்பியோ அளித்த பேட்டி
இது தொடர்பாக மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கான தடை குறித்து திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து நிச்சயம் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறினார். அதோடு டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளால் பயனர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பயனர்களின் தகவலை பயன்படுத்தி உளவு வேலை பார்ப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிபிட்டார்.

அதிநவீன உளவு பார்க்கும் கருவி
இந்த நிலையில் அமெரிக்காவில் 25 எம்பிக்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற செயலிகள் மூலம் அமெரிக்கர்கள் தகவல்கள் எளிதாக திருடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு கருதி
நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. இதை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் தனியுரிமையை பாதுகாக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கடிதத்தையடுத்து இந்த விவகாரம் குறித்து அடுத்த ஒன்று இரண்டு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் இடையே வர்த்தக போர்
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீன தான் என அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு, இரு நாடுகளும் இடையே வர்த்தக போர், ஹாங்காங்கில் சீன எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து புகார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் சீன ஆப்கள் தடை தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications