UPI புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe வழியாக ரூ.2000 க்கு மேல் பணம் அனுப்ப கட்டணம்? 2026-ல் அமலுக்கு வருகிறதா?
யுபிஐ வழியாக ரூ.2000 க்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா என்கிற யூகங்கள் - இந்த 2025 ஆம் ஆண்டில் பல முறை எழுந்துள்ளன. ஆக இதே யூகம் 2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நேரத்தில் மீண்டும் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்த கேள்விக்கான, இந்த யூகத்திற்கான பதில் - இப்போதைக்கு இல்லை. ஆனால் வரவிருக்கும் பட்ஜெட் 2026 ஆலோசனைகளின் போது, யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கான வணிக தள்ளுபடி விகிதம் (Merchant discount rate - MDR) மீதான அரசாங்க மானியங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தேவை என்றுகூறி கட்டண முறை ஆபரேட்டர்கள் (Payment system operators) வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்டிஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வணிக தள்ளுபடி விகிதம் என்றால் என்ன? எம்டிஆர் என்பது வணிகர்கள் ஒரு பரிவர்த்தனையை செயல்படுத்துவதற்காக வங்கிகள் அல்லது கட்டண நிறுவனங்களுக்கு செலுத்தும் கட்டணம் ஆகும். இந்த நிதியாண்டில், டிஜிட்டல் கட்டண ஊக்கத்தொகைகளுக்காக ஒன்றிய அரசனது ரூ.427 கோடியை ஒதுக்கியுள்ளது.
அதே நேரத்தில் டிஜிட்டல் கட்டண சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது ரூ.2,000 க்கும் குறைவான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.5,000 - ரூ.6,000 கோடியை செலவிடுகிறது. இந்த இடத்தில் தான் ரூ.2000 க்கு கீழான யுபிஐ பேமண்ட்,ரூ.2000 க்கு மேலான யுபிஐ பேமண்ட் என்கிற பிரிவும், ரூ.2000 க்கு மேலான பணப்பரிவர்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா என்கிற கேள்விகள் உருவாகுகின்றன
ஆனால் அப்படியான எந்த யோசனையும் அரசாங்கத்திடம் இல்லை. கடந்த 2024 ஜூலை மாதத்தில் கூட ரூ.2000 க்கு மேலான யுபிஐ பேமண்ட்க்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதா என்கிற யூகங்ககள் கிளம்பின. அந்த நேரத்தில் நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி, இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், அத்தகைய பரிந்துரை எதுவும் வரவில்லை என்றும் அவர் பதிலளித்து இருந்தார்
பட்ஜெட் 2026 ஆலோசனைகளின் போது, ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் உள்ள பெரிய வணிகர்களிடம் நடத்தப்படும் குறைந்த மதிப்புள்ள கொடுப்பனவுகளுக்கு 25 - 30 அடிப்படை புள்ளிகள் எம்டிஆர் விதிக்க அனுமதி கோரவும் தொழில்துறை பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு ஆகும்.
மிகவும் குறைவான மதிப்புள்ள யுபிஐ பேமண்ட்களை செய்யும் நபரிடமிருந்து, வணிகருக்கு பணம் செலுத்துவதில் கட்டாயப்படுத்தப்பட்ட பூஜ்ஜிய-எம்டிஆர் முறையை தக்கவைக்க தேவையான நிதியை விட தற்போதைய ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்த தொழில்துறை வாதிடுகிறது.
குறைந்த மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளை ஆதரிக்க எங்களுக்கு ரூ.6,000 கோடிக்கு மேல் தேவை, இது தற்போது பட்ஜெட்டில் உள்ள ரூ.427 கோடியை விட மிக அதிகமாகும் என்று ஒரு பெரிய கட்டண முறை ஆபரேட்டரின் மூத்த நிர்வாகி ஒருவர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் கூறி உள்ளதாக தி எகானாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான அரசாங்க ஆதரவு கடுமையாக ஏற்ற இறக்கமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், டிஜிட்டல் கட்டண சலுகைகளுக்காக அரசாங்கம் ரூ.1,500 கோடியை ஒதுக்கியது, இது 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,600 கோடியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.3,500 கோடியாகவும் உயர்ந்து.
பின்னர் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.2,000 கோடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ.427 கோடியாக குறைந்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகள் சாதனை உச்சத்தை எட்டிய போதிலும், இது அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகை கால செலவினங்களால் இயக்கப்படுகிறது.
2020 முதல் யுபிஐ சேவையில் பூஜ்ஜிய-எம்டிஆர் ஆணையை அரசாங்கம் பராமரித்து வந்தாலும், ஒவ்வொரு குறைந்த மதிப்புள்ள யுபிஐ வணிக பரிவர்த்தனையையும் செயலாக்க சுமார் ரூ.2 செலவாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விவாதங்கள் தெரிவிக்கின்றன. இந்த செலவுகள் தற்போது முழுமையாக பேமண்ட் செயல்முறைகளை இயக்கும் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தற்போது யுபிஐ அடைந்துள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டால், இந்த அமைப்பு இனி சாத்தியமில்லை என்று கட்டண ஆபரேட்டர்கள் வாதிடுகின்றனர். அவர்களின் கூற்றுப்படியே இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சுற்றுச்சூழல் அமைப்பில் - யுபிஐ சேவையானது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, இது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் சுமார் 85% அளவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








