அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு.. UPI தொடர்பான புதிய அரசாங்க அறிவிப்பு., PhonePe, GPay-வில் என்ன மாற போகிறது?
இந்திய அரசாங்கம் ஆனது அனைத்து வங்கிகளுக்கும் யுபிஐ (UPI) சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு? வங்கிகள் என்ன செய்ய வேண்டும்? எதற்காக இதை செய்ய வேண்டும்? இதன் விளைவாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற ஆப்களில் என்ன மாற்றங்கள் நடக்கும்? இதோ விவரங்கள்:
யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுக ( Unified Payments Interface) பரிவர்த்தனைகளில் ஏற்படும் அதிக தோல்வி விகிதங்களை கட்டுப்படுத்த, என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்துடன் (National Payments Corporation of India) இணைந்து செயல்படுமாறு வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பரிவர்த்தனை வெற்றி விகிதங்களை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களாக இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. ஏனென்றால் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) உட்பட சிறிய வங்கிகளில் யுபிஐ பரிவர்த்தனை தோல்விகள் அதிகமாக உள்ளன. வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர் விழிப்புணர்வு ஆகியவைகள் இத்தகைய தோல்விகளில் பெரும் பங்கை கொண்டுள்ளன.
கூடவே தொழில்நுட்ப அல்லது வணிக காரணங்களால் கூட யுபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடையலாம். தொழில்நுட்ப சிக்கல்களில் வங்கிகள் அல்லது என்பிசிஐ-இல் ஏற்படும் சிஸ்டம் செயலிழப்புகள் மற்றும் நெட்வொர்க் இடையூறுகள் அடங்கும். தவறான பின் நம்பரை எண்ணை உள்ளிடுவது அல்லது ஒருவரின் பரிவர்த்தனை வரம்பை மீறுவது ஆகியவை வணிகம் தொடர்பான காரணங்களாகும்.
முதல் 50 யுபிஐ பங்கேற்பாளர்களில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஆனது கடந்த பிப்ரவரியில் அதிக வணிகம் தொடர்பான தோல்வி விகிதத்துடன் (21.97 சதவீதம்) பட்டியலில் முதலிடம் பிடித்தது. பரோடா யுபி வங்கி ஆனது 7.26 சதவீதத்துடன் அதிகபட்ச தொழில்நுட்ப சரிவை பதிவு செய்து உள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரி 2026 இல் 11 வங்கிகளில் செயலிழப்பு ஏற்பட்டதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது. அதே சமயம், பேங்க் ஆஃப் இந்தியா அந்த மாதத்தில் சுமார் 14 மணி நேரம் வரை அதிகபட்ச செயலிழப்பை சந்தித்தது. இந்த செயலிழப்புகள் பெரும்பாலும் தொழில்நுட்ப கோளாறுகளா அல்லது வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டவையா என்பதை கண்டறிய ஒரு மதிப்பீடு அவசியம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
2025 நிதியாண்டில் அனைத்து சில்லறை டிஜிட்டல் பணம் செலுத்துதலில் 81 சதவீதம் யுபிஐ மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு இன்றும் பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வருகிறது.
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், பணம் செலுத்தும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு உதவியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 58 கோடி டிஜிட்டல் தொடர்பு மையங்களும், கிட்டத்தட்ட 570 கோடி க்யூஆர் கோட்களும் நிறுவப்பட்டுள்ளன.
யுபிஐ மற்றும் ரூபே-வின் எதிர்கால வளர்ச்சி, குறுங்கடன், காப்பீடு மற்றும் லாயல்ட்டி புரோகிராம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை சார்ந்திருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இந்த பகுதிகளில் அதிக பயனர் தளமும் ஈடுபாடும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








