உஷார்- "பப்ஜி மோகம்" தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்- சடலத்தை வீட்டில் பதுக்கி தந்தையிடம் கட்டிய கதை!
உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்திருக்கிறான். இதையடுத்து பப்ஜி விளையாடக் கூடாது என அந்த சிறுவனின் தாயார் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்த மகன் தாயை சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிறுவனின் தந்தை ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி இந்த குற்றத்தை அந்த சிறுவன் செய்துள்ளான்.

10 வயது சகோதரியையும் மிரட்டிய சிறுவன்
இந்த சம்பவம் குறித்து கிழக்கு லக்னோவின் ADCP காசிம் அபிடி கூறுகையில்., ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியின் மூலம் பப்ஜி விளையாடக்கூடாது என்று கண்டித்த தாயை மகன் சுட்டுக் கொன்றுள்ளான். இதனால் உயரிழந்த தனது தாயின் உடலை ஒரு குளிரூட்டப்பட்ட(ஏசி) அறையில் மறைத்து விட்டு துர்நாற்றம் அடிக்காமல் இருக்க அந்த சிறுவன் ரூம் ப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளான், மேலும் இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என தனது 10 வயது சகோதரியையும் மிரட்டியுள்ளான். தலையில் சுடப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம்.

சிறுவன் கூறிய கதை
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், செவ்வாய்கிழமை (ஜூன் 7) மாலை அழுகிய உடலின் நாற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அக்கம்பக்கத்தினரும் மேலோட்டமாக இந்த துர்நாற்றம் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனம் தனது தந்தையிடம் தாய் இறந்துவிட்டார் என்று மட்டும் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் தந்தை அக்கப்பக்கத்தினரை அழைத்ததோடு காவல்துறைக்கும் தகவல் அளித்தார். ஆரம்பத்தில் இந்த சிறுவனம் ஒரு பொய்யான கதையை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளான். "ஏதோ ஒரு வேலைக்காக தனது வீட்டிற்கு எலக்ட்ரீஷியன் வந்ததாகவும் அவர் தனது தாயை சுட்டுக் கொன்றதாகவும் கூறியுள்ளான்".

போலீஸார் நடத்திய விசாரணை
சிறுவன் கூறியதை கேட்ட அவரது தந்தையும் போலீஸிடம் அந்த தகவலையே தெரிவித்தார். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் கூறியது முற்றிலும் கற்பனை கதை என தெரியவந்தது. தொடர்ந்த நடத்திய கூடுதல் விசாரணையில் உண்மை சம்பவம் மொத்தம் வெளிச்சதுக்கு வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சம்பவம்
இதேபோல் ஒரு சம்பவம் பஞ்சாப் மாநிலத்திலும் அரங்கேறி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் வசித்து வருபவர் சந்தர் சேகர் ஷர்மா. இவரது மகன் மானிக் ஷர்மா படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுநேரத்தையும் செல்போனில் கேம் விளையாடுவதிலேயே செலவிட்டு வந்துள்ளார். இதை பார்த்த அவரது தந்தை விளையாட்டை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி கண்டித்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இதனால் மானிக் ஷர்மா மன அழுத்தம் காரணமாக தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து படிப்பில் கவனம் செலுத்தாமல் பப்ஜி போன்ற விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் தான் கண்டித்தாகவும் அதனால் இப்படி நடந்தவிட்டதாகவும் அவரது தந்தை வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
File images


Click it and Unblock the Notifications