பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனரா?- சமூகவலைதளத்தில் வலுக்கும் விமர்சனம்- உ.பி அரசு பதில்!
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்
ஆக்சிமீட்டர் எனப்படும் பிராணவாயு அளவு கண்டறியும் கருவி, தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடற்வெப்ப அளவு கண்டறியும் கருவிகள் ஆகும். கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து பல தனியார் நிறுவனங்களும், பிற நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ நன்கொடைகள் வழங்கி வருகிறது.

கொரோனா பரவல் இரண்டாம் அலை
இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதிக கொரோனா தொற்று பரவிய மாநிலங்களில் உத்திரபிரதேசமும் ஒன்றாகும். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கு விசாரணை சமயத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் இறப்பது என்பது இன அழிப்புக்கு சற்றும் குறைவானது இல்லை என நீதிமன்றம் கூறியிருந்தது.

பசுக்கள் பாதுகாப்பு மையங்கள்
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 5,268 பசுக்கள் பாதுகாப்பு மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் என அம்மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பசுக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது. இத்துடன், மாவட்டந்தோறும் பசுக்களுக்கு உதவி மையம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்
இதைத்தொடர்ந்து, உ.பி. அரசின் இந்த உத்தரவிற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. மக்கள் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளின்றி தவித்து வரும் நிலையில், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஊழியர்களுக்காகதான் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள்
இதையடுத்து, இதுதொடர்பாக உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தகவல் துறை), பசுக்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்களை பயன்படுத்துமாறு உத்தரப்பிரதேச அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், பசுக்கள் பாதுகாப்பு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காகதான் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்களுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications