Aadhaar அப்டேட் செய்ய போறீங்களா.. அடுக்கடுக்கான புதிய கெடுபிடிகள்.. UIDAI அறிவிப்பு!
ஆதார் அட்டை (Aadhaar Card) தொடர்பான மோசடிகளைத் தடுக்க, யுஐடிஏஐ (UIDAI) எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identity Authority of India) ஆனது ஆதார் விவரங்களை புதுப்பிப்பது தொடர்பான கடுமையான சோதனைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
எக்கனாமிக் டைம்ஸின் (ET) சமீபத்திய அறிக்கையின் படி, ஆதார் தொடர்பான மோசடி மற்றும் போலி யுஐடி எண்கள் அதிகரித்து வரும் வழக்குகளை தீர்க்க யுஐடிஏஐ ஆனது வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

இதற்காக யுஐடிஏஐ ஆனது மற்ற அதிகாரப்பூர்வ தரவுத்தளங்களுடன் தகவல்களை க்ராஸ் ரெப்ரென்ஸிங் செய்வதன் மூலம் சரிபார்ப்பு செயல்முறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, தவறான புகைப்படங்கள் மற்றும் தவறான பயோமெட்ரிக் தகவல்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் யுஐடிஏஐ ஆனது ஆதார் விண்ணப்ப செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. கூடவே அனைத்து மாநிலங்களும் ஆன்லைனில் சரிபார்க்கக்கூடிய ஆவண அமைப்புகளுக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புவனேஷ் குமாரின் கூற்றுப்படி, பிறந்த தேதி தொடர்பான மாற்றங்களுக்கு முதலில் அசல் பிறப்புச் சான்றிதழில் மாற்றங்கள் தேவை; ஏனெனில் இரண்டாம் நிலை சான்றிதழ்கள் யுஐடிஏஐ-வால் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் உண்மையான கைரேகைகளை சரிபார்க்க யுஐடிஏஐ ஆனது ஒரு ஏஐ/எம்எல் (AI/ML) வழிமுறையையும் செயல்படுத்தியுள்ளது. இதன்கீழ் லைவ் பிங்கர் டிடெக்ஷனை (Live Finger Detection) உறுதி செய்யப்படும் மற்றும் பயோமெட்ரிக் மோசடிகள் தடுக்கப்படும். இந்த அமைப்பு வயது தொடர்பான மதிப்பீட்டிற்காக ஏஐ அடிப்படையிலான கேமராக்களை பயன்படுத்துகிறது. இது பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் தேவையில்லாத குழந்தைகளின் ஆதார் அட்டைகளுக்கு வயதானவர்கள் விண்ணப்பிப்பதை தடுக்கிறது.
கிரிக்கெட் அணியில் விளையாட விரும்பினால் தங்கள் வயதை இரண்டு ஆண்டுகள் குறைக்க முயற்சிக்கிறார்கள். ஒரு வேலையைப் பெற விரும்பினால் தங்கள் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க விரும்புகிறார்கள். இது ஒரு மோசடியாகும். சிலர் இதை பிறப்பு சான்றிதழ்கள் மூலம் செய்ய முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதை கடுமையாக இறுக்குகிறோம். ஏனென்றால் ஆதாரின் ஒருமைப்பாடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் யுஐடிஏஐ-வின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக பள்ளிகள் வழியாக, குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்கை அப்டேட் செய்யும் திட்டத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படிப்படியாக தொடங்க உள்ளதாக யுஐடிஏஐ அறிவித்து இருந்தது. 7 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை இன்னும் முடிக்கவில்லை என்றும் புவனேஷ் குமார் கூறி இருந்தார். நினைவூட்டும் வண்ணம் எம்பியு என்பது - ஒரு குழந்தை ஐந்து வயதை எட்டிய பிறகு அவசியமான ஒன்றாகும்.
பெற்றோர் ஒப்புதலுடன் பள்ளிகள் மூலம் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க தொடங்கும் திட்டத்தில் யுஐடிஏஐ செயல்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் சோதித்து வருகிறோம், இது இன்னும் 45 முதல் 60 நாட்களில் தயாராக இருக்கும் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார்.
ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் தரவின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை பராமரிக்க கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 7 வயதிற்குள் இது முடிக்கப்படாவிட்டால், தற்போதைய ஆதார் விதிமுறைகளின் கீழ் அந்த குழந்தையின் ஆதார் எண் செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.
மேலும் ஐந்து முதல் ஏழு வயது வரை பயோமெட்ரிக் அப்டேட் சேவை இலவசமாகவே கிடைக்கும். ஆனால் குழந்தை ஏழு வயதை எட்டியவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது . எனவே ரூ.100 என்கிற ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் கட்டணத்தை தவிர்க்க உங்கள் குழந்தை 7 வயதை கடக்கும் முன்பே இதை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








