தேர்தல் வர்ற நேரத்தில் இப்படி ஒரு நடவடிக்கையா.. ஆதார் அட்டைக்கு புது கிடுக்குபிடி.. UIDAI Vs எலெக்ஷன் கமிஷன்!
இந்தியாவில் ஆதார் அடையாள அட்டையை வழங்கும் பொறுப்பை கொண்டுள்ள அமைப்பான இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) ஆனது, இறந்து போன வாக்காளர்கள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் அடையாளம் காணப்பட்ட இறந்த வாக்காளர்கள் குறித்த தனது தரவுகளை அணுகக் கோரி யுஐடிஏஐ ஆனது, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.

இறந்தவர்களின் ஆதார் எண்களை நீக்குவதன் மூலம் ஆதார் தரவுத்தளத்தை அப்டேட்டட் ஆக வைத்திருக்க முடியும் என்கிற நோக்கத்தின் கீழ் தான் யுஐடிஏஐ இதையெல்லாம் செய்கிறது என்பது வெளிப்பாடு. ஆனால் இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று என்டிடிவி-யின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எஸ்ஐஆர் (SIR) என்கிற சிறப்பு தீவிர திருத்தத் தரவுகள் ஆனது பிரத்தியேகமாக ஆணையத்திற்கே சொந்தமானது என்றும், அரசு நிறுவனங்கள் உட்பட வெளி அமைப்புகளுடன் அதை பகிர முடியாது என்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பு என்றும், அது தனது தரவுகளின் நம்பகத்தன்மையைப் பேண வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறி உள்ளாராம்.
ஜூன் 2025 இல் பீகாரில் தொடங்கிய சிறப்பு தீவிர திருத்த பணியில், சுமார் 22 லட்சம் இறந்த வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 12 மாநிலங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டத்திலும், இதேபோன்ற நீக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் மட்டுமே, இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, சுமார் 24 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2025 இல், வாக்காளர் தரவுகளை சரிபார்த்து முரண்பாடுகளை கண்டறிய ஆதார் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த செயல்பாட்டின் போது, மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, யுஐடிஏஐ அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.
அதில், ஜனவரி 2009 இல் ஆதார் முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாநிலத்தில் கிட்டத்தட்ட 34 லட்சம் ஆதார் வைத்திருப்பவர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சுமார் 13 லட்சம் குடியிருப்பாளர்கள் ஆதார் திட்டத்தில் ஒருபோதும் பதிவு செய்யவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க - இறந்த நபர்களின் ஆதார் எண்களை நீக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பரில், இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பொது விநியோக அமைப்பு மற்றும் தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி, யுஐடிஏஐ ஆனது இரண்டு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்களை செயலிழக்க செய்திருந்தது.
ஒரு அறிக்கையில், இறந்த நபர்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவுகளை பெறுவதற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் யுஐடிஏஐ கூறியுள்ளது. ஆதார் எண்கள் ஒருபோதும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்படுவதில்லை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பை தொடர்ந்து, மாநிலங்கள் முழுவதும் மேலும் பல இறந்த வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு தழுவிய அளவில் சிறப்பு தகவல் அறிக்கை (SIR) செயல்முறை நிறைவடைந்தவுடன், அது மேலும் விரிவான தரவு தொகுப்பை வழங்கும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்திய பதிவாளர் ஜெனரல் பராமரிக்கும் தரவுகளை விட, இறந்த வாக்காளர்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தரவுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது என்றும், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு ஒரு துல்லியமான மதிப்பீடு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஓர் அதிகாரி கூறியுள்ளதாகவும் என்டிடிவி-யின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








