Aadhaar-ல் உள்ள பிறந்த தேதி செல்லுபடியாகாதா? UIDAI என்ன சொல்கிறது? இதோ விவரம்..
நாட்டில் அனைத்து முக்கிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதாவது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது.
அதுவும் இந்தியாவில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் வெளிநாட்டினர் கூட சரியான ஆவணங்களைக் கொடுத்து இந்தியாவில் ஆதார் கார்டை பெற முடியும். ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு விதிமுறை தான், அதாவது இந்த குறிப்பிட்ட நபர் 182 நாட்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்கும்பட்சத்தில் அவர் அட்டை பெற தகுதியுடையவர் ஆவார்.

குறிப்பாக இந்த ஆதார் கார்டை வெறுமெனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்விட முடியாது. பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், புகைப்படம், கைரேகைகள், கருவிழி உள்ளிட்ட தகவல்கள் மூலம் ஒரு குடியிருப்பாளரை ஆதார் அடையாளம் காட்டுகிறது. ஆதார் என்பது ஒரு அடையாளங்காட்டியாக விளங்குகிறது.
இந்நிலையில் ஆதார் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, ஆதார் கார்டு என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமே, அதனைப் பிறந்த தேதிக்கு சான்றாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒருவரின் பிறந்த தேதிக்குரிய செல்லுபடியாகும் சான்றாக ஏற்றுக்கொள்ள இயலாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதுவும் அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு நடைமுறைகளில் இந்த ஆவணத்தின் சட்டரீதியான அந்தஸ்து குறித்து நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஆதார் அட்டை வழங்கும் இந்த அமைப்பு இத்தெளிவுரையை வழங்கியுள்ளது. அதன்படி ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியின் துல்லியம் குறித்து ஏதேனும் சர்ச்சை எழும் பட்சத்தில், அதை நிரூபிக்கும் பொறுப்பு (burden of proof) அந்த ஆதார் எண் வைத்திருப்பவரையே சாரும். குறிப்பாக ஒரு தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அங்கீகாரச் செயல்முறைக்கு உட்பட்டு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். இருப்பினும் அதுவே தனித்து நின்று பிறந்த தேதிக்கு சான்றாக அமையாது என UIDAI திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டின் ஆதார் சட்டத்தின்படி, ஆதார் ஒரு அடையாள சான்றாகத் தெளிவாக அங்கீகரிக்கிறது. ஆனால் பிறந்த தேதியைச் சரிபார்ப்பதற்கான அங்கீகாரத்தை அது வழங்குவதில்லை என்பதை இந்தத் தெளிவுரை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே இதன் விளைவாக வயது சரிபார்ப்பு தேவைப்படும் சமயங்களில், தனிநபர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

மேலும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அதுவும் முன்பு நாம் ஆதார் அப்டேட் செய்யவேண்டும் என்றால் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இனி ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஆதார் செயலியை (Aadhaar app) கொண்டு வந்தது. இந்த செயலி மூலம் இனி ஆதாரில் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications