ஒரே ஒரு லேப்டாப்புக்கு இவ்வளவு பெரிய திட்டமா? சினிமாவை மிஞ்சிய சதுரங்க வேட்டை.. நடந்தது என்ன?
ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவது போன்ற சம்பவங்களை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், ஒரு லேப்டாப்பிற்காக ஒருவர் தனது முழு அடையாளத்தையே அழித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
மிகவும் பிரபலமான உபெர் (Uber) நிறுவனத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முதன்மை மனிதவள அதிகாரி ரகு தென்னேதி என்பவர், சமீபத்தில் லிங்க்டின் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது உபெர் நிறுவனம், வேலைக்குச் சேர்ந்த ஒரு புதிய ஊழியருக்கு விலையுயர்ந்த ஆப்பிள் மேக்புக் (MacBook) லேப்டாப் மாடலை வழங்கி உள்ளது. ஆனால் அந்த லேப்டாப் கைக்கு கிடைத்தவுடன், தனது போன் நம்பர், சமூக வலைதளப் பக்கங்கள் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு அந்த நபர் காணாமல் போயுள்ளார்.
குறிப்பாக வேலைக்குச் சேர வேண்டிய நாளில் அந்த நபர் வராததால், சந்தேகமடைந்த நிறுவன அதிகாரிகள் அவர் வழங்கியிருந்த மொபைல் எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், அழைத்தபோது "இந்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை" என்ற பதிலே கிடைத்துள்ளது.
அவர் நிறுவனத்தின் போன் நம்பரை மட்டும் பிளாக் செய்யவில்லை, மாறாக தான் பயன்படுத்தி வந்த சிம் கார்டை முற்றிலுமாக முடக்கியுள்ளார். இதனால் அவரை எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அவரது தொழில்முறை சமூக வலைத்தள கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவையும் முற்றிலுமாக நீக்கப்பட்டு எந்தத் தடயமும் இல்லாமல் போயிருந்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றியதால், நிறுவன அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், நிறுவனம் லேப்டாப்பை அனுப்பிய முகவரியைச் சோதித்துப் பார்த்தபோது, அது ஒரு பாழடைந்த கட்டடத்தின் பின்னால் அமைந்திருந்த வெற்று நிலம் என்பது தெரியவந்தது. அதாவது அவர் லேப்டாப்பை பெற்றுக்கொள்வதற்காகவே ஒரு திட்டமிட்ட போலி முகவரியை அவர் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து உடனடியாக நிறுவனத்தின் கணினிப் பிரிவினர் அந்த லேப்டாப் எங்குள்ளது என்று கண்டுபிடிக்க முயன்றபோது, அந்த லேப்டாப் மாடலின் டேட்டா ஏற்கனவே முற்றிலும் அழிக்கப்பட்டு, கண்டுபிடிக்க முடியாத ஒரு போலி இடத்தில் இயங்குவது போலக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான நேர்காணல் சுற்றுகள் அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து, பின்னணி சரிபார்ப்பு செயல்முறைகளையும் போலியான தகவல்கள் மற்றும் அடையாளங்களின் மூலம் ஏமாற்றி, இறுதியில் ஒரு லேப்டாப்பைப் பெறுவதற்காக இவ்வளவு பெரிய திட்டத்தை அரங்கேற்றியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண திருட்டாகத் தோன்றும் இந்தச் சம்பவத்தின் பின்னால் இருந்த திட்டமிடல் மற்றும் நுணுக்கமான செயல்பாடுகள், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் குறித்துப் பதிவிட்டுள்ள அந்த நிறுவன அதிகாரி, அவர் வெறுமனே வேலைக்கு வராமல் ஏமாற்றவில்லை, தனது முழு அடையாளமே போலியானது என்பதை நிரூபித்துவிட்டு, எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டார். இது சாதாரண மோசடி அல்ல, ஒரு சினிமா படத்தில் வரும் காட்சியைப் போல இருக்கிறது. தயவுசெய்து எங்களுடைய லேப்டாப்பையாவது திருப்பித் தந்துவிடுங்கள் என்று வேதனையுடனும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications