5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?
சமீபத்தில் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்றது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் முழு அளவிலான தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை அதானி குழுமம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அதானி டேட்டா நெட்வொர்க்ஸ்
இந்தியாவில் நடைபெற்ற 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றது.
மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நடுவில் அதானி குழுமம் பங்கேற்க காரணம் என்ன என்று பலரும் கிசுகிசுத்தனர். ஆனால் நிறுவனம் ரீடெய்ஸ் டெலிகாம் சேவைகளை வழங்க விரும்பவில்லை எனவும் அதன் தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க்கை அமைப்பதற்காக 5ஜி ஸ்பெக்ட்ரம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
அதானி குழுமமானது தனது டெலிகாம் நிறுவனத்துக்கு அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் என பெயரிட்டது.

5ஜி ஏலத்தில் பங்கேற்ற அதானி குழுமம்
இந்த நிலையில் எதிர்பாராத ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 5ஜி ஏலத்தில் பங்கேற்ற அதானி குழுமம் தற்போது டெலிகாம் சேவைகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் உரிமம் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வார திங்கட்கிழமை இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தரப்பு தகவல்களும் தெரிவிக்கிறது.

உரிமம் பெற்ற அதானி குழுமம்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய ஆறு வட்டங்களில் மட்டும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் தொலைத்தொடர்பு துறையிடமிருந்து ஒருங்கிணைந்த உரிமத்தை பெற்றுள்ளதாக மற்றொரு அறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது.
தொடர்ந்து நிறுவனம் அதன் நெட்வொர்க்கில் நீண்ட தூர அழைப்புகளை மேற்கொள்ளவும், இணைய சேவை வழங்கவும் தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் தொகை முதலீடு செய்த அதானி குழுமம்
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்ற அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம், 400MHz ஸ்பெக்ட்ரத்திற்கான உரிமத்தை வாங்கியது. இதையடுத்து அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதன் 400MHz ஸ்பெக்ட்ரத்திற்கான உரிமத்தை பயன்படுத்திக் கொள்ளும். நிறுவனம் இதற்கு ரூ.212 கோடி முதலீடு செய்தது.

அனைத்து வகையான டெலிகாம் சேவைகள்
5ஜி ஸ்பெக்ட்ரத்தை அதானி குழுமம் வாங்கியது அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே என முன்னதாக கூறப்பட்டது.
மேலே குறிப்பிட்டது போல் தற்போது மத்திய அரசிடம் நிறுவனம் உரிமத்தை வாங்கி இருக்கும் பட்சத்தில் அதானி நிறுவனம் இனி இந்தியாவில் அனைத்து வகையான டெலிகாம் சேவைகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கௌதம் அதானி?
குஜராத் அகமதாபாத்தில் பிறந்தவர் கௌதம் அதானி, இவர் அதானி குழுமத் தலைவர் ஆவார். அடிப்படை வசதியோடு வாழ்ந்து வந்த இவர் 1988 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலாகும்.
பின் 1990 ஆம் ஆண்டு குஜராத்தில் தனி போர்ட்டை உருவாக்கி முந்த்ரா என பெயர் வைத்தார். பின் இந்தியாவில் அதிக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் தனியார் போர்ட் ஆக இது உருவெடுத்தது.

பல்வேறு துறைகளில் வளர்ச்சி..
கடந்த 2000-ம் ஆவது ஆண்டுக்கு பிறகு கன்ஸ்டர்கஷன், பவர் பிளாண்ட், ரயில் பாதை அமைப்பு, சுரங்கம், கப்பல் கட்டுமானத் தொழில் என பல தொழிலில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது அதானி குழுமம். இந்தியா மட்டுமின்றி இந்தோனேஷியா, சிங்கப்பூர் என தனது தொழிலை வெளிநாடுகளில் முன்னேற்றினார்.

கால் பதித்த இடமெல்லாம் வெற்றி
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தனியார் துறைமுகங்கள் கட்டுமானப் பணியை அதானி குழுமம் செய்து வருகிறது.
அதானி பிளாண்ட்ஸ் மற்றும் பவர் லிமிடெட் என்ற பெயரில் மின்சார உற்பத்திப் பணி செய்யப்பட்டு வருகிறது. இதுவும் முன்னணிதான், பின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.இதில் சோலார் மற்றும் காற்றாலை மின்சார தயாரிப்பு நடைபெற்று வருகிறது.
பின் அதானி கேஸ், இதுவும் குஜராத்தில் பெருமளவு பிரபலமடைந்த நிறுவனமாகும். அதானி கன்ஸ்டர்கஷன் என்ற பெயரில் மிகப்பெரிய அபார்ட்மென்ட்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. வில்மர் என்கிற நிறுவனத்துடன் இணைந்து அதானி வில்மர் என்ற பெயரில் பல உணவு தயாரிப்பு விற்பனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஃபைனான்ஸ் நிறுவனமும் அதானி குழுமத்தில் இடம்பெற்றிருக்கிறது, அதானி கேபிடல்ஸ் என்ற பெயரில் தொழிற் கடன், சொத்து கடன், டூவீலர் கடன், கார் கடன் என பல வகைகளுக்கு லோன் தரப்படுகிறது.
பின் அதானி ஹவுசிங் பைனான்ஸ் என்ற பெயரில் அதிக வீட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதானி பவுண்டேஷன் என்ற பெயரில் அதிக சமூக சேவைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொறுத்திருந்து பார்க்கலாம்..
காலடி பதிக்கும் இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டும் அதானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பிரதான இடத்தை பிடித்திருக்கிறார். இவர் உண்மையாகவே உரிமத்தை வாங்கி தொலைத் தொடர்பு துறையில் நுழையும் பட்சத்தில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு சற்று பதற்றத்தை ஏற்படும் என்பதில் ஆச்சரியமில்லை.
மலிவு விலையில் இணைய சேவை வழங்கும் ஜியோவுக்கு போட்டியே இல்லை என்று இருந்த நிலையில், அதானி வருகையால் ரீசார்ஜ் விலையில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.


Click it and Unblock the Notifications