இனி Google Pay, போன்பே போதும்..TNPSC தேர்வுக் கட்டணங்களைச் செலுத்தலாம்.. இதோ விவரம்..
இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவும் இந்த யுபிஐ செயலிகள் மூலம் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைகளுக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ (UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு முறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அப்போது முதல் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதாவது தேர்வு குறித்த அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் ஆகியவை விரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7,557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (Selection) செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒருமுறை பதிவிற்கானக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, கூகுள் பே, போன்பே போன்ற UPI செயலிகள் மூலம் செலுத்தும் வசதியைத் தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
யுபிஐ புது விதிகள்:
பேடிஎம் (paytm), போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வந்துள்ளன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
அதன்படி உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








