டிக்டாக் தடை: இதெல்லாம் செய்ய ரெடியா இருக்கோம்- டிக்டாக் சொன்ன பதில்!
டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் குவிக்கப்படும் போர் விமானங்கள்
லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு
அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தாக தெரிவித்தது.

59 சீன செயலிகளுக்கு தடை
இதையடுத்து டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.

டிக்டாக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
மத்திய அரசு இந்த அறிவிப்புக்கு பிறகு டிக்டாக் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த செயலி இப்போதுவரை வைத்திருப்பவர்கள் அதை பார்க்க முடிகிறது எனவும் அன்இன்ஸ்டால் செய்தால் மட்டுமே திரும்ப கிடைக்காது என தெரிகிறது.

டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி
இந்த நிலையில் டிக்டாக் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் உத்தரவுக்கு தங்கள் நிறுவனம் கீழ்படிந்து நடக்கும் எனவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து ரகசியத்தை காக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தங்களது பயனர்களின் எந்த ஒரு சிறு விவரங்களையும் சீன உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துக் கொண்டது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதிகளுக்கு இணங்க செயல்பட தயார்
இதுதொடர்பாக மத்திய அரசை சந்தித்து விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்படுக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 இந்திய மொழிகளில் டிக்டாக் பயன்படுத்த வழிசெய்துள்ளதாகவும். டிக்டாக்கினால் கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இதை வாழ்வாதாரமாக சார்ந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications