70 ஆயிரம் டாலர் பரிசுப் பொருள்.. மோசடி மெசேஜை அனுப்பி Google Pay மூலம் சிறுவனிடம் பணம் பறித்த மர்ம கும்பல்!
இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ (upi) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்கும் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது. ஆனாலும் ஆன்லைன் பரிவர்த்தனையில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும்.
இந்நிலையில் வாட்ஸ்அப் வழியாகப் பரிசு பொருள் கிடைக்கும் என நம்ப வைத்து 9-வது படிக்கும் சிறுவனிடமிருந்து கூகுள் பே மூலம் ரூ.45000 மோசடி செய்த மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது வேலூர் மாவட்டம் அருகே உள்ள குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் டைலரிங் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருடன் 13 வயதான தம்பியும் வசித்து வருகிறார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
70 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருள்
இந்த நிலையில் தன் அக்காவின் மொபைல் போனை அந்த சிறுவன் அவ்வப்போது பயன்படுத்தி வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த செல்போன் வாடஸ்அப் வழியாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் 70 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருளை வென்றுள்ளீர்கள். இது பிரான்சிலிருந்து கொரியர் மூலம் அனுப்பப்படுகிறது. அதை பெற குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என தமிழில் எழுத்தப்பட்டுடிருந்தாக கூறப்படுகிறது.
இந்த மெசேஜை உண்மை என்று நம்பிய அந்த சிறுவன், அக்காவிடம் சொல்லாமல் கூகுள் பே மூலம் முதலில் ரூ.5000 அனுப்பியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து மெசேஜ்கள் வந்ததால், அவர் மீண்டும் ரூ.15000 மற்றும் ரூ.25000 என மொத்தம் ரூ.45000 அனுப்பியுள்ளார்.
அதன்பின்பும் பரிசு பொருள் டெல்லி விமான நிலையத்தில் சிக்கியுள்ளது அதில் 70 ஆயிரம் டாலர் இருப்பதால், அதற்காக மேலும் ரூ.1,60,000 கட்டணம் செலுத்த வேண்டும், அதை உடனே அனுப்பினால் பொருள் கிடைக்கும் என மெசேஜ் வந்துள்ளது. அதை கேட்ட சிறுவன் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை, ஏற்கனவே அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்புங்கள் என கேட்டபோது பதில் வரவில்லை, பின்பு அந்த நபருக்கு போன் செய்த போது அது ஸ்விட்ச் ஆப் ஆக இருந்தது என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து சிறுவன் வீட்டில் யாருக்கும் கூறவில்லை. காலை, அவரது அக்கா ஆன்லைனில் பொருட்கள் வாங்க கூகுள் பே கணக்கை பார்த்த போது பணம் இல்லாமல் இருந்தது. அதில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பியிடம் விசாரித்து போது, பரிசு பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த 45000 ரூபாய் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டா அக்கா அதிர்ச்சி அடைந்து, வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்த்து போது அது மோசடி என்பதை உணர்ந்தார். பின்னர் உறவினர்களிடம் ஆலோசனை செய்து போது, இது ஒரு இணைய மோசடி என்றும் உடனே வேலூர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்பு குடியாத்தம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுபிஐ செயலிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். மோசடி செய்பவர்கள், மெசேஜ், போன் கால் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் மூலம் அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நம்பும் விதமாக எதாவது ஒரு கதையைச் சொல்லி, அவர்களுடைய வங்கி கணக்கில் (bank account) இருக்கும் பணத்தை எளிதாகத் திருடிவிடுகிறார்கள். இது போன்ற சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் உங்கள் போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தெரியாத இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தேவையில்லாத செய்திகள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகளை அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.


Click it and Unblock the Notifications








