மனிதக் கழிவுகளில் இயங்கும் ரயில்: மீத்தேன் இப்படியும் தயாரிக்கலாம்.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் விமானத்தில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் அதிகம் விரும்புகின்றனர். அதுவும் எளிய மக்களின் விமானம் என்றால் அது ரயில் வண்டிதான்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தரையில் ஊர்ந்தே செல்லும் ரயில் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும். ஆனாலும் உலகில் இயங்கும் பெரும்பாலான ரயில்கள் டீசலில்தான் இயங்குகின்றன. அது சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் பெருமளவில் ஏற்படுக்கின்றன.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் இப்போது மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேனை மின்சாரமாக மாற்றி, சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் இயங்கும் ரயில் வண்டியை வடிவமைத்துள்ளது அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம்.

வெளிவந்த தகவலின்படி, பயோ அல்ட்ரா என்ற பெயரில் பிரிட்டனில் இயங்கும் ரயில் கார், மீத்தேன் வாயுவை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்து இயங்குகிறது. அதன்படி 20 மீட்டர் நீளமுள்ள ரயில், மணிக்கு 50 மைல் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

தற்சமயம் இந்த ரயில் வண்டியை பொதுவெளியில் பிரபலப்படுத்துவதற்காக பத்து மீட்டர் நீளத்தில் மாதிரி ரயில் ஒன்றை இதன் வடிமைப்பாளர்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக இந்த புதுவகை ரயில் ஆனது எந்தவிதமான நச்சுக் காற்றையும் காற்றில் கலக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் டீசல் எஞ்சினில் இயங்கும் ரயில் வண்டி ஆனது நச்சு காற்றை வெளிப்படுத்தும்.

அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புது வகை ரயிலில் உள்ள எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால் 2000 மைல்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வழக்கமான தண்டவாளங்களிலே இந்த ரயிலை இயக்கலாம். அதேசமயம் டீசல் எடையை காட்டிலும், இதன் எடை குறைவு என்பதால் ரயில் பாதையை பராமரிக்க செலவாகும் கட்டணமும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய வகை ரயில் ஆனது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications