இப்படி ஒரு ATM க்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. கார்டு தேவை இல்ல.. ஸ்கேன் பண்ணுங்க.. பணத்தை எடுங்க!
இந்தியா முழுவதும் போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு யுபிஐ பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை 9.36 மில்லியனாக இருந்தது. தற்போது நடப்பு ஆண்டில் இது 9,415 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு,மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுகிறார்கள்.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தள்ளுவண்டிக் கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லாவற்றிலுமே கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த யுபிஐ முறை மிகவும் சுலபமாகவும், பாதுகாப்பாக இருப்பதால் இதைப் பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி ஏடிஎம் (ATM) இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன். இந்த வசதி கொண்ட ஏடிஎம் மெஷின் மும்பையில் நடைபெற்ற Global FinTech Fest விழாவில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதைப் பயன்படுத்தும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
வழிமுறை-1: முதலில் யுபிஐ மூலம் Withdraw செய்யும் வசதி கொண்ட UPI ATM மெஷினில் UPI Cardless Cash முறையைத் தேர்வு செய்து உள்நுழைய வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து நீங்கள் Withdraw செய்ய வேண்டிய பணத்தின் மதிப்பைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.
வழிமுறை-3: அதன்பின்னர் ஏடிஎம் மெஷன் ஸ்கிரீனில் தெரியும் QR Code-ஐ போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ பரிவர்த்தனை செய்யும் செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப வேண்டும். இறுதியாக ஏடிஎம்-இல் மெஷினில் இருந்து வெளிவரும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக ஏடிஎம்-ல் யுபிஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் முறை அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா முழுவதும் இந்த புதிய வசதிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர யுபிஐ பயனர்களின் வசதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியைக் கொண்டு வர ஆர்பிஐ அனுமதித்துள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாட்டில் யுபிஐ மற்றும் நுகர்வோர் கடன் சந்தையை மேலும் விரிவு செய்யும் நோக்கில் Pre-sanctioned Credit Lines/Loans எனும் கடனை பயனர்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இதன் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கடன் பெற்று யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக வங்கிகள் இந்த புதிய முறையின் கீழ் கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாகச் செப்டம்பர் 4-ம் தேதி வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயனர்களுக்கு இந்த கடன் சார்ந்த விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கலாம் என்று ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது.
அதேபோல் இதற்கான முன் அனுமதியைப் பயனர்களிடமிருந்து யுபிஐ அமைப்புகள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. மேலும் யுபிஐ-இல் வரும் இந்த புதிய வசதி கிரெடிட் கார்டு பயன்பாடு போன்று தான் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும் அவசரக் காலங்களில் யுபிஐ சேவையில் வரும் இந்த புதிய வசதி கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications