கடந்த தசாப்தத்தின் 6 அளப்பரிய கண்டுபிடிப்புகள்! அறிவியல் அற்புதங்கள்..
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை கூறுகளை கண்டுபிடித்ததில் இருந்து, ஜீன் எடிட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை, 2010 களை கட்டமைத்த ஆறு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்.

செவ்வாயில் மனிதர்கள் வாழலாம்!
செவ்வாய் கிரகத்தில் எப்போதாவது உயிரினங்கள் இருந்ததா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கு உயிர்கள் வாழ் சாத்தியக்கூறுகள் உள்ளன என கண்டறிந்த ஒரு சிறிய, ஆறு சக்கர ரோபோவுக்கு நன்றி கூற வேண்டும். ஆகஸ்ட் 6, 2012 அன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் வட்டமான கூழாங்கற்களைக் கண்டுபிடித்தது. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகள் அங்கு பாய்ந்தன என்பதற்கான புதிய சான்றுகள் அவை. மேலும் 2014 ஆம் ஆண்டில், உயிரினங்களின் அடிப்படை தொகுதிகள் என நாசா அழைக்கும் சிக்கலான கரிம மூலக்கூறுகளையும் கியூரியாசிட்டி கண்டுபிடித்தது.

கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி
பிரபஞ்சத்தின் சிறிய மூலையைப் பற்றி நீண்டகாலமாக நினைத்துக்கொண்டு நமது கிரகம் தான் தனித்துவமானது என கூறிவந்தோம். ஆனால் அவதானிப்புகளை உடைத்தெறிந்த கெப்லர் விண்வெளி தொலைநோக்கிக்கு நன்றி கூறவேண்டும்.
2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கெப்லரின் பணி நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே 2,600 க்கும் மேற்பட்ட கிரகங்களை அடையாளம் காண உதவியது. எக்ஸோப்ளானெட்டுகள் என்றும் அழைக்கப்படுகிற இவ, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கிரகம் இருப்பதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள். அதாவது அங்கே பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன.
கெப்லரின் வாரிசான டெஸ் 2018 ஆம் ஆண்டில் நாசாவால் செலுத்தப்பட்டது. இதன்மூலம் வேற்று கிரக வாசிகளுக்கான சாத்தியங்களை அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் இந்த தசாப்தத்திலிருந்து ஒரு நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி மற்றவற்றை காட்டிலும் விட உயர்ந்தது. செப்டம்பர் 14, 2015 அன்று முதன்முறையாக ஈர்ப்பு அலைகள், பிரபஞ்சத்தின் ஊடே சிற்றலைகளைக் கண்டறிந்தது தான் அந்த நிகழ்வு.

சிஆர்ஐஎஸ்பிஆர் சகாப்தம்
க்ளஸ்டர்டு ரெகுலரி இன்டர்ஸ்பேஸ் ஷார்ட் பாலிண்ட்ரோமிக் ரிபீட்ஸ் (சி.ஆர்.எஸ்.பி.ஆர்) என்பது டி.என்.ஏ தொகுப்புகளின் குடும்பம். உயிரிமருத்துவ துறையை சிஆர்ஐஎஸ்பிஆர்-க்கு முன் மற்றும் பின் என இரு சகாப்தங்களாக பிரிக்கலாம். சிஆர்ஐஎஸ்பிஆர் என்பது மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.
2012 ஆம் ஆண்டில், இம்மானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோர் பிற உயிரினங்களின் மரபணுக்களைத் திருத்த பாக்டீரியாவின் நோயெதிர்ப்பு பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் புதிய கருவியை உருவாக்கியதாக தெரிவித்தனர்.

முன்னணியில் நோயெதிர்ப்பு சிகிச்சை
பல தசாப்தங்களாக, புற்றுநோயை எதிர்த்துப் போராட டாக்டர்கள் மூன்று முக்கிய ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்: அறுவை சிகிச்சை, கீமோதெரபி மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு. 2010 களில் நீண்டகாலமாக சந்தேகிக்கப்பட்ட ஒரு முறை நான்காவதாக அறிமுமானது. அது நோயெதிர்ப்பு சிகிச்சை, அல்லது கட்டி செல்களை குறிவைக்க உடலின் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் ஆகும்.
மிகவும் மேம்பட்ட நுட்பங்களில் ஒன்றான இந்த CAR T- செல் சிகிச்சையில், ஒரு நோயாளியின் டி-செல்கள் - அவற்றின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி - அவற்றின் இரத்தத்திலிருந்து சேகரிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உடலில் மீண்டும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் புற்றுநோய் குணப்படுத்தப்படுகிறது.

புதிய மனித சொந்தங்கள்
சைபீரியாவின் அல்தாய் மலைகளில் உள்ள டெனிசோவா குகைக்கு பெயரிடப்பட்ட டெனிசோவன்ஸ் என்ற புதிய இனம், மனித குடும்பத்தில் புதிய உறுப்பினராக சேர்த்தலுடன் கடந்த தசாப்தம் தொடங்கியது.
விஞ்ஞானிகள் 2010 ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணின் விரல் எலும்பின் டி.என்.ஏவை வரிசைப்படுத்தினர். இது மரபணு ரீதியாக நவீன மனிதர்களிடமிருந்தும், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடன் வாழ்ந்த மிகவும் பிரபலமான பண்டைய உறவினர்களான நியண்டர்டால்களிடமிருந்தும் வேறுபட்டது என்பதைக் கண்டறிந்தது. இதன்மூலம் மனிதகுலத்தில் புதிய இனம் உறுப்பினராக இணைந்தது.

செயற்கை நுண்ணறிவு
"செயற்கை நுண்ணறிவு" பற்றிப் பேசும்போது நாம் பொதுவாகக் குறிப்பிடுவது -இயந்திர கற்றல் (மெசின் லேர்னிங்). இது 2010 களில் உலகிற்கு அறிமுகமானது.
புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி பரந்த தரவுத்தொகுப்புகளில் வடிவங்களை அடையாளம் காணும் இயந்திரக் கற்றல், இன்று குரல் உதவியாளர்கள் முதல் நெட்ஃபிக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் பரிந்துரைகள் வரை அனைத்தையும் செயல்படுத்துகிறது. கூகுளின் ஆல்பா கோ முதல் நிகழ்நேர குரல் மொழிமாற்றம் மற்றும் மேம்பட்ட முகநூல் பேஸ் ரிகக்னேசன் வரை இந்த தசாப்தத்தின் அனைத்து பெரிய கண்டுபிடிப்புகளும் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டவையே.


Click it and Unblock the Notifications