இப்படி ஓப்பன்-ஆவா சொல்லுவீங்க.. BSNL கிடைக்கும் இந்த 4 இடங்களிலும்.. அமைச்சர் பொளேர்!
பிஎஸ்என்எல் (BSNL) சேவைகள் கிடைக்கும் 4 டெலிகாம் வட்டங்களின் (Telecom Circles) பெயர்களை குறிப்பிட்டு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆன சந்திர சேகர் பெம்மாசானி, அந்த வட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை தரத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி குறிப்பிட்ட அந்த 4 டெலிகாம் சர்க்கிள்கள் - மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் மற்றும் வங்காளம் ஆகும். கூடவே வணிகத்தை மேம்படுத்துவதற்காக, பிஎஸ்என்எல் பயன்படுத்தும் மார்க்கெட்டிங் உத்திகளையும் அவர் மதிப்பாய்வு செய்தார்.

உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய வட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டது. சேவையின் தரத்தை மேம்படுத்துதல், டவர் தொடர்பான மின் சிக்கல்களை தீர்ப்பது, ஃபைபர் கட்களை சரியான நேரத்தில் சரிசெய்தல் மற்றும் பிஎஸ்என்எல் இன் தடத்தை வலுப்படுத்த புதுமையான, உள்ளூருக்கு பொருத்தமான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளோம் என்று பெம்மாசானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் "மெல்ல மெல்ல" அதன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போதுள்ள பயனர்களை தக்க வைத்து கொள்ளவும், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டிபோட்டு, தனது சேவையின் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதோடு, சேவைகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த இடத்தில் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியா, 2026 நிதியாண்டில் பிஎஸ்என்எல் தனது மொபைல் சேவை வருவாயை 50% அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனுடன் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் சிந்தியா கேட்டுக் கொண்டார்.
எதிர்காலத்திற்கான உத்திகளை வகுக்கவும், புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் பிஎஸ்என்எல், அமெரிக்க ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பிசிஜி) உடன் இணைந்து உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. உண்மையிலேயே இந்த அளவிற்கு தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலையும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிராய் ரிப்போர்ட் இதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆகும்!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய ரிப்போர்ட் ஆனது பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) சேவைகளை கிழித்து தொங்கவிடும் புள்ளிவிவரங்களை புட்டுப்புட்டு வைத்து இருந்தது.
ஜூன் 30, 2025 நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இரண்டுமே புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை பெற்றுளளன. மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவைகள் தங்கள் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன,
ஜூன் 2025 நிலவரப்படி, பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி எப்டபுள்யூஏ சந்தாதாரர் தளத்தில் 1,742,211 சந்தாதாரர்களை கொண்டுள்ளது; இதில் புதிதாக சேர்க்கப்பட்டது 201,781 ஆகும். இதேபோல ரிலையன்ஸ் ஜியோ 6,108,140 சந்தாதாரர்களை கொண்டுள்ளது; புதிதாக சேர்க்கப்பட்டது 253,201 ஆகும். மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7,850,351 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜியோவிலிருந்து மட்டும் 3,118,616 கிராமப்புற சந்தாதாரர்கள் உள்ளனர்.
வயர்லெஸ் சந்தாதாரர்களின் சேர்ப்பு மற்றும் இழப்பு: பாரதி ஏர்டெல் 763,482 (0.76 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்தது, அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ 1,912,780 (1.91 மில்லியன்) சந்தாதாரர்களை சேர்த்தது. மறுகையில் உள்ள வோடபோன் ஐடியா அதே காலகட்டத்தில் 217,816 வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்தது.
பொதுத்துறை நிறுவனங்கள் ஆன (அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள் ஆன) பிஎஸ்என்எல் 305,766 வயர்லெஸ் சந்தாதாரர்களையும், எம்டிஎன்எல் 152,657 சந்தாதாரர்களையும் இழந்துள்ளன. சந்தை பங்குகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனமானது 90.46 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 7.78 சதவீத சந்தைப் பங்கை மட்டுமே கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








