ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!
எலான் மஸ்க் (Elon Musk) - உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆளுமைமிக்க ஒரு மனிதர்.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), டெஸ்லா (Tesla) மற்றும் சமீபத்தில் ட்விட்டர் (Twitter) என எலான் மஸ்க்கின் "வணிக வட்டம்" நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போகிறது!

'சக்ஸஸ்' இருந்தால் கூடவே சர்ச்சையும் இருக்கும்!
உலகம் முழுவதும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருந்தாலும் கூட, எலான் மஸ்க்கின் சில வார்த்தைகள் மற்றும் சில நடவடிக்கைகள் அவ்வப்போது சில சலசலப்புகளை ஏற்படுத்துவது வழக்கம்!
அப்படியான ஒரு சமீபத்திய சலசலப்பு, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் நடந்தேறியது. அந்த சலசலப்பின் இறுதியில் பல்பு வாங்கியது என்னவோ நம்ம எலான் மஸ்க் அண்ணன் தான்!

40 மணிநேரம் வேலை செய்ய சொன்ன எலான்!
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன எலான் மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் தன் ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்புமாறு "மிரட்டல் தொனியில்" உத்தரவிட்டு இருந்தார்.
இது குறித்து தொடர்ச்சியான மின்னஞ்சல்களை அனுப்பிய எலான் மஸ்க், ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும் அல்லது அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டி இருந்தார்.
மேலும் டெஸ்லாவில் உள்ள அனைவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

பீதி அடைந்து.. ஆபிஸிற்கு வந்து பார்த்தால்?
எலான் மஸ்க்கின் "மிரட்டலுக்கு" அடிபணிந்த ஊழியர்கள் மற்றும் வேலையை காப்பாற்றிக்கொள்ள விரும்பிய பணியாளர்கள் டெஸ்லாவின் ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா பிளான்ட்டிற்கு வேலைக்கு திரும்பி உள்ளனர்.
அங்கு வந்து பார்த்த பிறகே பல ஊழியர்களுக்கு உட்கார இடம் கூட இல்லை என்பதும், ஆபிஸில் இருக்கும் மேசைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதும், எல்லாவற்றை விடவும், வைஃபை சேவை மிகவும் மட்டமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கிளம்புங்க.. கிளம்புங்க... மீண்டும் வீட்டில் இருந்தே வேலை செய்ங்க!
"அப்படி இப்படி" என்று உட்கார இடம் கிடைத்தாலும், அவர்கள் வேலை செய்ய முடியாத அளவுக்கு வைஃபை சிக்னல் பலவீனமாக இருந்துள்ளது.
"அது ஒரு ஆபிஸ் போலவே இல்லை" என்கிற காரணத்தால் டெஸ்லா நிறுவனத்தின் மேலாளர்கள் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.
தொழிலாளர்களுக்கான இருக்கைகள் பற்றாக்குறை, மோசமான வைஃபை போன்ற புகார்களின் வழியாக, டெஸ்லா நிறுவனம் தனது ஊழியர்களை வரவேற்க தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

கார் பார்க்கிங்-க்கு கூட இடமில்லையாம்!
டெஸ்லாவில் உள்ள தற்போதைய ஊழியர்கள், ஃப்ரீமாண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சென்ற போது, தத்தம் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காமல் போராடியதாக கூறி உள்ளார்கள்.
சிலர் கார் பார்க்கிங் கிடைக்கவில்லை என்பதால், அருகிலுள்ள BART ஸ்டேஷன்களில் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு டெஸ்லா நிறுவனத்திற்குள் வேலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

டெஸ்லாவின் இந்த நிலைமைக்கு என்ன காரணம்?
பெரிய காரணம் ஒன்றும் இல்லை. டெஸ்லா நிறுவனத்தின் எண்ணிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் - இரட்டிப்பாகியுள்ளது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில், அதிகப்படியான பணியமர்த்தல் நடந்தது.
தற்போது இந்நிறுவனத்தில் 99,210 பேர் பணியாற்றுகின்றனர். அதாவது கிட்டத்தட்ட 1 லட்சம் பேர்!
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊதியம் பெறும் தொழிலாளர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்களில் எத்தனை பேர் அலுவலகம் அல்லது டெஸ்லாவின் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்பது பற்றி தெளிவான விவரங்கள் இல்லை.

பல்பு வாங்கிய எலான் மஸ்க்!
கோவிட்-19 தொற்றுநோய் ஆனது கடுமையாக பரவிய காலத்தின் போது, அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஒரு தொழிற்சாலையைக் கொண்ட டெஸ்லாவின் ஃப்ரீமாண்ட் வளாகத்தில் 'ரிப்போர்ட்' செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
தற்போது நிலைமை சரியாகி விட்டதை தொடர்ந்து எலான் மஸ்க், தன் ஊழியர்கள் அனைவரையும் வேலைக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.
ஒருகட்டத்தில், அலுவலகத்திற்கு திரும்பவும் அல்லது வேலையை விட்டு வெளியேறவும் என்கிற ஒரு இறுதி எச்சரிக்கையையும் வழங்கினார்.
"ஒருவேளை டெஸ்லா ஊழியர்கள் நிறுவனத்தின் கொள்கையுடன் உடன்படவில்லை என்றால் வேறு எங்காவது வேலை செய்வது போல் நடிக்க தான் வேண்டும்" என்றும் கடுமையாக சாடினார்.
எலான் மஸ்க்கிட்ட இப்படியெல்லாம் பேச்சு வாங்கிட்டு ஆபிஸ்க்கு போய் பார்த்தால்.. அங்க உட்கார கூட இடம் இல்லையாம். நல்ல வைஃபை கனெக்ஷன் கூட இல்லயாம்! கடைசியில் பல்பு யாருக்கு!? நம்ம மஸ்க் அண்ணனுக்கு தான்!


Click it and Unblock the Notifications