டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் மீது அமெரிக்க நீதித்துறை குற்றவியல் விசாரணை !
எலன் மஸ்க்கின் டுவிட்டர் பதிவின் மீது குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க நீதித்துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது தெரிந்தவுடன் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மின்சார கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லாவின் (Tesla) நிறுவனர் எலன் மஸ்க் மீது அமெரிக்க நீதித் துறை குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலை எலன் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். டெஸ்லா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்துவிட்டு பின்னர் அதனை மறுத்ததன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளதாகக் கூறி அமெரிக்க நீதித்துறை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

எலன் மஸ்க்கின் டுவிட்டர் பதிவின் மீது குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க நீதித்துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது தெரிந்தவுடன் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்தப் பிரச்சினை விரைவாக முடிவுக்கு வந்துவிடும் என நம்புவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாகச் சில ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கேட்டுள்ளது. அவ்வளவுதான். எலன் மஸ்க்கை விசராணைக்கு அழைக்கும் அழைப்பாணையோ அல்லது அது போன்ற சட்ட நடைமுறைகளோ அமெரிக்க நீதித் துறையால் மேற்கொள்ளப்படவில்லை.” என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கினால் அந்நிறுவனத்தின் முதலீடுகள் பாதுகாப்பானதாக இருக்கும் என டுவிட்டரில் எலன் ம்ஸ்க் தெரிவித்த கருத்தினால் சிறிய முதலீட்டாளர்கள் பாதி்ப்படைந்தனர் எனக் கூறி இம்மாதத் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
டெஸ்லா நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக மாற்றும் எண்ணம் இருப்பதாக எலன் மஸ்க் அறிவித்தவுடன், ஆகஸ்ட் 7 ஆம் தேதி அந்நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வைச் சந்தித்தன. ஒரு பங்கின் விலை 420 டாலர் அளவுக்கு உயர்ந்தது.
பொதுவாக இது போன்ற முக்கியமான அறிவிப்புகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிப்பதுதான் வழக்கம்.
எலன் மஸ்க் தன்னுடைய அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய காரணத்தினால் டெஸ்லா நிறுவனம் பொது வணிக நிறுவனமாகவே தொடர்ந்து இயங்குகிறது.

அமெரிக்கச் சந்தை ஒழுங்காற்றுநர்களும் எலன் மஸ்க்கின் குழறுபடியான இந்த அறிவிப்பை விமர்ச்சித்து உள்ளனர். டெஸ்லா நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த சிலர் அந்நிறுவனத்தை விட்டு விலகியுள்ளனர். நிறுவனத்தின் நிதிசார் செயல் அதிகாரி ஜஸ்டின் மெக்னியர் கடந்த வாரம் இந்நிறுவத்தைவிட்டு விலகினார். டேவ் மோர்டன் (Dave Morton) என்னும் உயர் அதிகாரியும் ஏற்கனவே விலகியிருந்தார்.
வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளின் காரணமாக எலன் மஸ்க் அடிக்கடி விமர்சனங்களைச் சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது. மரிஜீவானா (marijuana) என்னும் சுருட்டைப் புகைத்தபடி இணைய வீடியோவில் தோன்றியது, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களின் தயாரிப்பு இலக்கை எட்டுவதற்காக உறக்கமின்றி தவித்துக கொண்டிருப்பதாக உணர்ச்சிமிகு பேட்டி கொடுத்தது எனப் பல வகையிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிக் கொண்ட கால்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த சிறுவர்களை மீட்பது தொடர்பாகத் தன் மீது அவதூறான கருத்துக்களைக் கூறியதாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மலைக் குகை சாகாச வீரர் வெர்னான் அன்ஸ்வொர்த் (Vernon Unsworth) என்பவர் எலன் மஸ்க் மீது அவதூறு வழக்கினைத் தொடுத்துள்ளார்.

இத்தனைச் சிக்கல்களுக்கும் இடையிலும் முதலீட்டாளர்கள் விரும்பும் நிறுவனமாக டெஸ்லா திகழ்கிறது. ஃபோர்டு நிறுவனத்தைக் காட்டிலும் முன்னணியிலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தைக் காட்டிலும் சற்றே பின் தங்கிய நிலையிலும் இந்நிறுவனம் திகழ்கிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 (Model 3) கார்களின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. கார் தயாரிப்பு நடவடிக்கைகளில் இருந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வந்துள்ள டெஸ்லா நிறுவனம், தற்போது கார்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்துத் தீவிரமாகச சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் என்னும் (SpaceX) தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ள எலன் மஸ்க், தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக நிலவைச் சுற்றிப் பார்க்கும் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணி யார் என்பதை சமீபத்தில் அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரும் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறப்பவருமான யுசாகு மாயிஜாவா (Yusaku Maezawa) என்பவர்தான் நிலவைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் முதல் விண்வெளிச் சுற்றுலா பயணியாவார்.


Click it and Unblock the Notifications