அமெரிக்கர்கள் கையில் இந்திய போன் : சச்சின் ஆசை நிறைவேறுமா.??
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களை அமெரிக்கர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த கனவு நிறைவேற இந்திய மொபைல் போன் நிறுவனங்களுக்கு என் ஆதரவு என்றும் இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்டிரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் நோட்புக் கருவியை வெளியிடும் போது சச்சின் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் அவர் இந்நிறுவனத்தின் முதலீடு செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்
மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதை அடுத்து என் வாழ்க்கையில் இது இரண்டாவது இன்னிங்ஸ் என்றும் இந்த தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் வாசகத்தில் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு என முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளதால் இதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தூதர்
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் விளம்பர தூதராக சச்சின் இருப்பார் என்பதோடு இதில் இவர் முதலீடு செய்திருக்கும் தொகை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருமை
ஒரு இந்திய நிறுவனம் உலக சந்தையில் போட்டியிடுவது நாம் அனைவருக்கும் பெருமையான விஷயம். இதற்கு என் முழு ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

துவக்கம்
ஆகஸ்டு 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்மார்ட்ரான் நிறுவனம் (Internet of Things) இண்டர்நெட் சார்ந்த பொருள்களில் கவனம் செலுத்தும், மேலும் இதுவரை சுமார் 50'க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்றிருப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் மகேஷ் லிங்காரெட்டி தெரிவித்துள்ளார்.

சேவை
நுகர்வோர் சாதனங்கள் மட்டுமின்றி க்ளவுட் ஸ்டோரேஜ், ரவுட்டர், ஸ்டோரேஜ் மற்றும் பல சேவைகளை வழங்க இருப்பதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்லிமிடெட்
வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் க்ளவுட் ஸ்டோரேஜ் வழங்கி, அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளில் இருந்தும் பயன்படுத்த வழி செய்யும் படி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவால்
இந்தியாவில் இதுபோன்ற நிறுவனத்தை இயக்குவது மிகவும் கடினமான விஷயம் என்றும் இதற்கு தேவையான சில வசதிகள் இங்கு இல்லை என்றும், இந்நிறுவனத்தில் தற்சமயம் வரை சுமார் $10 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து வரும் இரு ஆண்டுகளில் சுமார் $100 மில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்
மேலும் இந்நிறுவனம் டிரோன் மற்றும் மொபைல் போன் மூலம் இயக்க கூடிய வீட்டு உபயோக கருவிகளையும் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications